- Home
- Sports
- Praggnanandhaa: செஸ் உலகை மிரள வைத்த தமிழன்! நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!
Praggnanandhaa: செஸ் உலகை மிரள வைத்த தமிழன்! நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!
Praggnanandhaa: இளம் கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று முதல் இந்தியராக வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாதனை
நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற 'நார்வே செஸ் 2026' (Norway Chess) சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் நமது தமிழகத்தை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இறுதிச் சுற்றில், ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரரான வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டு அதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
சரிவில் இருந்து எழுச்சி
இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவிற்கு சற்று சவாலாகவே இருந்தது. மொத்தம் 10 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில், 6 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால், அங்கிருந்துதான் பெரும் எழுச்சி பெற்ரார். இறுதி 4 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக எதிராளிகளை வீழ்த்தி, யாரும் எதிர்பாராத வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார்.
இந்தத் தொடரின் மிக முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது, உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) அவரது சொந்த மண்ணிலேயே கிளாசிக்கல் பிரிவில் இரண்டு முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியதாகும். இது ஒட்டுமொத்த செஸ் உலகையும் இந்தியாவின் பக்கம் திரும்பப் பார்க்க வைத்துள்ளது.
இறுதிச்சுற்றில் ஆதிக்கம்
நேற்று நடைபெற்ற 10-வது மற்றும் இறுதிச் சுற்றில், ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரரான வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் வின்சென்ட் செய்த தவறுகளைச் சாதகமாக்கிக் கொண்டு, மிக நேர்த்தியாக விளையாடி முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார். மொத்தம் 18 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார்.
முதல் இந்தியராக பெரும் சாதனை
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நார்வே செஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், தற்போதைய உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் குகேஷ் உள்ளிட்ட பல இந்திய முன்னணி வீரர்கள் பலமுறை இதில் பங்கேற்றிருந்தாலும், இதுவரை எவராலும் இந்தத் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்ததில்லை. தற்போது 20 வயதே ஆகும் பிரக்ஞானந்தா, அந்த நீண்ட கால ஏக்கத்தைத் தீர்த்து வைப்பதுடன், நார்வே செஸ் கோப்பையை ஏந்தும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள செஸ் ரசிகர்கள் மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பிரக்ஞானந்தாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

