- Home
- Sports
- Sports Cricket
- Rohit Sharma: ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்! விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் விலகலா? புதிய தகவல்!
Rohit Sharma: ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்! விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் விலகலா? புதிய தகவல்!
Rohit Sharma: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஓடிஐ தொடரில் விராட் கோலியை போல் ரோகித் சர்மாவும் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் ஓடிஐ தொடரில் விராட் கோலி விலகல்; ரோகித் சந்தேகம்
ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் ஜூன் 6ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 13 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது. இதுகுறித்த தகவல்களை பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. முதலில், விராட் கோலி தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் (hamstring injury) காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
விராட் கோலி விலகல் ஏன்?
சமீபத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது, அவர் ஓடுவதற்குச் சிரமப்பட்டது தெரிந்தது. ஆனாலும், அந்தப் போட்டியில் 42 பந்துகளில் 75 ரன்கள் அடித்து, ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். 37 வயதான விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் இதுவரை 299 இன்னிங்ஸ்களில் 14,797 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 54 சதங்கள் மற்றும் 77 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் இவர்தான்.
ரோகித் சர்மாவும் விளையாடுவது சந்தேகம்
இந்த ஐபிஎல் சீசனில் கூட, 16 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். இந்த நிலையில், விராட் கோலியை போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தத் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின்போது தசைப்பிடிப்பு காயத்தால் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் அவர் பெயர் இருந்தாலும், அவரது உடற்தகுதியைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும்.
நியூசிலாந்து தொடரில் சொதப்பிய ரோகித்
39 வயதான ரோகித் சர்மா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 283 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரோஹித் தான் கேப்டனாக இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில், 3 இன்னிங்ஸ்களில் வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
விராட் கோலியைப் போலவே, ரோஹித் சர்மாவும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்தும், கடந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

