- Home
- Sports
- Sports Cricket
- சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் இல்ல.. இந்திய அணி கேப்டனாகும் RCB சிக்சர் மன்னன்? முன்னாள் வீரர் கணிப்பு!
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் இல்ல.. இந்திய அணி கேப்டனாகும் RCB சிக்சர் மன்னன்? முன்னாள் வீரர் கணிப்பு!
இந்திய அணியின் கேப்டனாக RCB சிக்சர் மன்னன் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்திய அணியின் கேப்டன்சி பேச்சுகள்
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், ஒரு வீரராகவும் சூர்யகுமார் யாதவை நீக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் இந்திய வீரரும், தேர்வாளருமான சபா கரீம் தெரிவித்துள்ளார். 2028 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து தேர்வாளர்கள் செயல்பட்டால், சூர்யகுமார் யாதவுக்கு இனி ஒரு வீரராகக் கூட அணியில் இடம் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
35 வயதாகும் சூர்யகுமார், சமீப காலமாக ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். 147.54 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர், இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்திருந்தார்.
சூர்யகுமார் யாதவை இனி சேர்க்க கூடாது
"சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஃபார்மை வைத்துப் பார்த்தால், தேர்வாளர்களின் எதிர்கால திட்டங்களில் அவர் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைத் தாண்டி யோசித்து, தேர்வாளர்கள் ஒரு புதிய அணியை உருவாக்கியதை நாம் பார்த்திருக்கிறோம். 2028 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, அதே போன்ற ஒரு மாற்றத்தை இப்போது எதிர்பார்க்கலாம். உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் இரண்டிலுமே சூர்யகுமாரின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. தேர்வாளர்கள் இனி அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது" என்று சபா கரீம் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ரஜத் படிதார் இந்திய அணி கேப்டனாக வேண்டும்
சூர்யகுமாருக்குப் பிறகு யார் அடுத்த இந்திய கேப்டன் என்ற கேள்விக்கு, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டாலும், சபா கரீம் ஒரு சர்ப்ரைஸ் பெயரை முன்மொழிந்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பைக்கு வழிநடத்திய ரஜத் படிதார் தான், சூர்யகுமாரின் அடுத்த வாரிசாக இந்திய கேப்டனாக வர வேண்டும் என்று சபா கரீம் கூறியுள்ளார். 33 வயதான படிதார், இதுவரை இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபா கரீம் விளக்கம்
"கேப்டன் பதவிக்கு நான் ரஜத் படிதாரின் பெயரைத்தான் பரிந்துரைப்பேன். தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வெல்வது என்பது மிகப்பெரிய விஷயம். மிகவும் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் அந்தப் பொறுப்பை அவர் கையாண்டார். பெரிய சூப்பர் ஸ்டார்கள், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு அணியை வழிநடத்துவது கடுமையான சவால். அதை படிதார் சிறப்பாக செய்தார். படிதாரைத் தவிர, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் வலுவாக இருப்பார்கள்," என்றும் அவர் கூறினார். இதேபோல் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பதவிக்கு தேர்வாளர்கள் தேர்வு வாய்ப்பில்லை என்றும் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

