- Home
- Sports
- Sports Cricket
- Shreyanka Patil: இந்தியா ஜெயித்தாலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு என்னாச்சு?
Shreyanka Patil: இந்தியா ஜெயித்தாலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு என்னாச்சு?
Womens T20 World Cup: மகளிர் T20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக முக்கிய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் காயம் அடைந்துள்ளார். இது தொடர்பான அப்டேட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகளிர் T20 உலகக்கோப்பை; இந்திய அணி வெற்றி
மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், இந்திய அணி நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மாவின் ஆல்-ரவுண்ட் ஆட்டம், ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி அரைசதம், ஸ்ரீ சரணியின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்மிருதி (74), ஷஃபாலி (55) ஆகியோரின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இது T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியை ஸ்ரீ சரணி (4/19), ஷஃபாலி (3/20), நந்தினி (2/22) ஆகியோர் பவுலிங்கில் மிரட்டினர். இதனால், ஒரு கட்டத்தில் 96/4 என இருந்த நெதர்லாந்து அணி, 114 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 4 புள்ளிகளுடன் குரூப் A-வில் முதலிடத்தில் உள்ளது.
ஸ்ரேயங்கா பாட்டீல் காயம்
இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு ஏற்பட்ட காயம் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின்போது கணுக்காலில் பலத்த காயமடைந்த அவரை, ஸ்ட்ரெச்சரில்தான் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு சென்றனர்.
நெதர்லாந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 9-வது ஓவரில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. தீப்தி ஷர்மா அந்த ஓவரின் நான்காவது பந்தை வீசினார். நெதர்லாந்து பேட்டர் ராபின் ரிஜ்கே, அந்தப் பந்தை மிட்-விக்கெட் திசையில் அடித்தார். பவுண்டரி லைனை நோக்கிச் சென்ற பந்தைத் தடுக்க, ஸ்ரேயங்கா பாட்டீல் வேகமாக ஓடிச்சென்று டைவ் அடித்தார். பந்தை வெற்றிகரமாக தடுத்துவிட்டாலும், டைவ் அடித்த வேகத்தில் ஸ்ரேயங்காவின் வலது கணுக்கால் மோசமாகத் திரும்பி தரையில் சிக்கிக்கொண்டது.
ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர்
காயம் ஏற்பட்டதும், ஸ்ரேயங்கா வலியால் மைதானத்திலேயே துடித்தார். உடனடியாக இந்திய மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்தனர். ஆனால், அவரால் சுயமாக எழுந்து நிற்க முடியவில்லை. இறுதியில், ஸ்ட்ரெச்சரில்தான் ஸ்ரேயங்காவை மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றனர். வெளியேறும்போது, அவர் தன் கைகளால் முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பிரிவில் ஸ்ரேயங்கா பாட்டீல் ஒரு முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார். காயத்தின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறிய, அவர் உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். உலகக்கோப்பையின் வரவிருக்கும் முக்கியப் போட்டிகளில் ஸ்ரேயங்காவால் விளையாட முடியுமா என்பது மருத்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அவரது காயம், இந்தியாவின் உலகக்கோப்பை கனவுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

