#ICCWTC ஃபைனல்: இந்திய அணி ஈசியா ஜெயிச்சுரும்..! ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் அதிரடி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. சமபலம் வாய்ந்த இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து கண்டிஷன் நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
எனவே நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
”என்னுடைய கணிப்பின்படி, இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும்” என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். தனது கேப்டன்சியில் 2 முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்று மோசமான தோல்வியை பெற்ற டிம் பெய்னுக்கு, மற்றவர்களைவிட கோலி தலைமையிலான இந்திய அணியின் பலம் தெரியும். எனவே அவர் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று கணித்துள்ளார்.