- Home
- Sports
- Sports Cricket
- India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
India Vs Ireland 1st T20: இந்தியா, அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 26) நடைபெற உள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகிறார். அபிஷேக் சர்மா நீக்கப்படுகிறார். இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

இந்தியா, அயர்லாந்து டி20 தொடர்
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது போட்டி பெல்ஃபாஸ்ட்டில் நாளை (ஜூன் 26) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரசிகர்களின் கவனம் இரண்டு பேர் மீது உள்ளது. ஒருவர், இந்திய கேப்டனாக அறிமுகமாகும் ஷ்ரேயாஸ் ஐயர்; மற்றொருவர், உலக கிரிக்கெட்டின் புதிய அதிசயமான 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி.
ஷ்ரேயாஸ் ஐயர், வைபவ் சூர்யவன்ஷி
உலகக் கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவை கேப்டன் பதவியிலிருந்தும், டி20 அணியிலிருந்தும் நீக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஷ்ரேயாஸின் சிறப்பான ஆட்டமே அவரை இந்திய அணியின் கேப்டன் என்ற பெரிய பொறுப்புக்கு கொண்டு சென்றுள்ளது.
இதேபோல் ஐபிஎல், உள்ளூர் போட்டிகள், மற்றும் 'ஏ' அணிக்காக அதிரடி காட்டிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, நாளை இந்திய சீனியர் அணியில் அறிமுகமாவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், வைபவ் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். மேலும், 11 பந்துகளில் அரைசதம் அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்திற்கான சாதனையை படைத்தார்.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இடையே போட்டி
வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக அறிமுகமானால், அணியில் இருந்து யாரை வெளியேற்றுவது என்பதுதான் அணி நிர்வாகத்தின் முக்கியக் கேள்வி. ஏனெனில் உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும்தான் இந்தியாவின் தொடக்க வீரர்களாக இருந்தனர். இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியில் சஞ்சு முக்கியப் பங்காற்றினார்.
அபிஷேக் சர்மா உலகக் கோப்பையில் சோபிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பினார். டி20 உலகக் கோப்பையின் கடைசி மூன்று போட்டிகளில் இந்தியாவின் டாப் ஸ்கோரராக இருந்தவர் சஞ்சு சாம்சன். தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதனால், அயர்லாந்துக்கு எதிராக அவரே இன்னிங்ஸைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதரவும் சஞ்சுவுக்கு உள்ளது.
அபிஷேக் சர்மாவுக்கு கல்தா
சஞ்சுவுடன் வைபவ் சூர்யவன்ஷி ஓப்பனிங் செய்தால், உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 7 போட்டிகளுக்குள் வைபவை சோதித்துப் பார்க்க நிர்வாகம் முடிவு செய்தால், அபிஷேக் வெளியே அமர வேண்டியிருக்கும். தொடக்க வீரர்களுக்குப் பிறகு பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இஷான் கிஷன் மூன்றாவது இடத்திலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும் களமிறங்குவார்கள். துணை கேப்டன் திலக் வர்மா ஐந்தாவது இடத்திலும், சிவம் துபே ஆறாவது இடத்திலும், ஃபினிஷர் ரோலில் அக்சர் படேலும் விளையாடுவார்கள்.

