- Home
- Sports
- Sports Cricket
- Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!
Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!
Arjun Tendulkar: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடியதை பார்த்து சச்சின் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

ஒரு வழியாக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர்
2026 ஐபிஎல் சீசன் முழுவதும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் பெஞ்சில் இருந்தார். கடைசியாக, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அர்ஜுன் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி முடிந்ததும், சச்சின் டெண்டுல்கர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், தன் மகன் அர்ஜுனின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் பதிவு
சச்சின் தனது பதிவில், 'வெல்டன் அர்ஜுன்! இந்த சீசனில் உன் திறமையை நம்பி, கடைசி வரை பொறுமையாகக் காத்திருந்து, கடினமாக உழைத்தாய். கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும், பாசிட்டிவாக இருந்ததைப் பார்க்க பெருமையாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 'கிரிக்கெட் உன் திறமையை சோதிப்பது போலவே, உன் பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். உன் கால்கள் தரையில் இருக்கட்டும். கிரிக்கெட் மீதான காதல் இப்படியே தொடரட்டும். எப்போதும் என் அன்பு உண்டு' என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எழுதியிருந்தார்.

ஓரளவு சிறப்பாக விளையாடிய அர்ஜுன்
19-வது ஐபிஎல் சீசனுக்கு முன்பு, அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெறும் 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இந்த சீசன் தொடங்கி 56 நாட்கள், 67 போட்டிகளுக்குப் பிறகு, லக்னோவின் கடைசிப் போட்டியில் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அர்ஜுன், பேட்டிங்கில் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில், 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து, 9 எக்கானமியில், அபாயகரமான பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி வெற்றி
முன்னதாக இந்த போட்டியில் பஞ்சாப் அணி லக்னோவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ ஜோஷ் இங்லிஸ் (44 பந்துகளில் 72 ரன்கள்), ஆயுஷ் பதோனி (18 பந்துகளில் 43 ரன்கள்), மற்றும் அப்துல் சமத் (20 பந்துகளில் 37* ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் (2/25) மற்றும் மார்கோ ஜான்சன் (2/33) சிறப்பாக பந்துவீசினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (51 பந்துகளில் 101*) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (39 பந்துகளில் 69) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், இன்னும் இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தங்களது தொடர்ச்சியான ஆறு தோல்விகளுக்கு பஞ்சாப் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது

