#AUSvsIND டெஸ்ட்: பும்ரா, ஷமியுடன் 3வது ஃபாஸ்ட் பவுலரா அவரை எடுங்க..! ஆஸி.,யை அடித்து காலி செஞ்சுடலாம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 3வது ஃபாஸ்ட் பவுலராக யாரை எடுக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. 2வது போட்டி மெல்போர்னிலும், 3வது டெஸ்ட் சிட்னியிலும், கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனிலும் நடக்கவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஆடவில்லை. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவில் நிறைய ஆடிய அனுபவம் கொண்டவர். இந்நிலையில், அவர் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு. ஆனாலும் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சைனி, கலீல் அகமது, முகமது சிராஜ் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாகவே உள்ளது.
ஆனாலும் பும்ரா, ஷமியுடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடப்போவது யார் என்ற கேள்வி நிலவும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கைஃப், 3வது ஃபாஸ்ட் பவுலராக உமேஷ் யாதவ் தான் ஆடவேண்டும். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றபோது, இஷாந்த் சர்மா முக்கிய பங்காற்றினார். ஆனால் இம்முறை அவர் ஆடாத நிலையில், உமேஷ் யாதவ் தான் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடவேண்டும். பும்ரா மற்றும் ஷமியுடன் நன்றாக கலந்துவிடுவார் உமேஷ் யாதவ். அவர்களுடன் நல்ல உறவில் இருப்பவர்.
உமேஷ் யாதவ் பயிற்சி போட்டியில் நன்றாக ஆடியிருக்கிறார். இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்றாலும், உமேஷ் யாதவ் 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நல்ல அனுபவம் கொண்டவர். ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவமும் கொண்டவர். எனவே, முதல் டெஸ்ட் போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரையும், ஸ்பின்னராக அஷ்வினையும் எடுக்க வேண்டும் என்று கைஃப் தெரிவித்துள்ளார்.