இது ரொம்ப மோசங்க; சும்மா விடமாட்டோம்..! மேட்ச் ரெஃப்ரி ஸ்ரீநாத்திடம் அப்பீல் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, போட்டியின் முடிவையே தலைகீழாக மாற்றிய அம்பயரின் தவறான முடிவு குறித்து மேட்ச் ரெஃப்ரியிடம் அப்பீல் செய்துள்ளதாக அந்த அணியின் சி.இ.ஓ சதீஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ராகுல், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, பிரித்வி ஷா, தவான், ஹெட்மயர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 13 ரன்களுக்கே இழந்துவிட்டாலும், அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின்(20 பந்தில் அரைசதம்) கடைசி நேர காட்டடியாலும் 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது.
158 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் மட்டும் தனி ஒருவனாக போராடி 89 ரன்களை குவித்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துவந்தார். ஆனால், போட்டி டை ஆன நிலையில் ஒரு ரன் அடித்து வெற்றியை தேடிக்கொடுக்காமல் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டாக, கடைசி பந்தில் ஜோர்டானும் அவுட்டாக போட்டி டையில் முடிந்தது.
இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சூப்பர் ஓவரில் அதிகபட்சம் 2விக்கெட்டுகள் மட்டுமே என்பதால், ரபாடா அந்த 2 விக்கெட்டையும் வீழ்த்திவிட்டதால், டெல்லி அணிக்கு 3 ரன்கள் என்ற எளிய இலக்கு சூப்பர் ஓவரில் நிர்ணயிக்கப்பட்டது. அதை அடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், பஞ்சாப் அணி இலக்கை விரட்டும்போது, 19வது ஓவரின் 3வது பந்தில் மயன்க் அகர்வால் அடித்த ஒரு ஷாட்டுக்கு, 2 ரன்கள் ஓடப்பட்டன. ஆனால் கள நடுவர், கிறிஸ் ஜோர்டான் க்ரீஸுக்குள் பேட்டை வைக்கவில்லை என்று கூறி, அதற்கு ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால், ஜோர்டான் பேட்டை க்ரீஸுக்குள் சரியாக வைத்துவிட்டுத்தான் ஓடினார் என்பது பின்னர் வீடியோ ஆதாரமாக தெரியவந்தது. எனவே அந்த ஒரு ரன் குறைக்கப்படாவிட்டால், நேற்று பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும்.
போட்டியின் முடிவையே மாற்றிய இந்த சம்பவம் குறித்தும், அம்பயரின் அலட்சியமான செயல்பாட்டையும் சேவாக், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன், விமர்சனமும் செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து மேட்ச் ரெஃப்ரியிடம் அப்பீல் செய்துள்ளதாக பஞ்சாப் அணியின் சி.இ.ஓ சதீஷ் மேனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், மேட்ச் ரெஃப்ரியிடம் அப்பீல் செய்துள்ளோம். மனிதத்தவறு நடப்பது இயல்புதான். ஆனால் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடரில் இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இதனால் நாங்கள் பிளே ஆஃபிற்கு செல்ல முடியாமல் கூட போகலாம். தோல்வி, தோல்விதான். ஆனால் எங்கள் அப்பீல் குறித்து ரிவியூ செய்ய வேண்டும் என்று சதீஷ் மேனன் தெரிவித்துள்ளார்.