#ENGvsIND டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஆடவில்லை..! இந்தியாவிற்கு கூடுதல் பலம்
இந்தியாவிற்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - இங்கிலாந்து மோதுகின்றன. இந்தியாவில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஆடவில்லை. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் இருவேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சர், டி20 உலக கோப்பை மற்றும் அதன்பின்னர் நடக்கும் ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முனைப்பில் உள்ளார்.
அதனால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட விரும்பவில்லை என்று ஆர்ச்சர் தெரிவிக்க, அவரது கோரிக்கையை ஏற்று அவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட விலக்கு அளித்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். எனவே ஆர்ச்சர் இந்தியாவிற்கு எதிராக ஆடமாட்டார்.
ஆர்ச்சர் ஆடாதது இந்திய அணிக்கு பலமாக அமையும். இங்கிலாந்து ஆடுகளங்கள் ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆர்ச்சரோ மிரட்டலான பவுன்ஸர்களை வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர். அவர் இந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், அவர் ஆடாதது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். ஆனாலும் இங்கிலாந்தின் அனுபவ ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியான ஆண்டர்சன் - பிராட் ஆடுவார்கள் என்பதால் இந்தியாவிற்கு டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது.