#IPL2021 ஏப்ரல் 9 முதல் ஐபிஎல்..! 6 இடங்களில் நடக்கும் போட்டிகள்
ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 30 வரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஐபிஎல் 14வது சீசனை இந்தியாவில் நடத்துகிறது பிசிசிஐ. ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடந்தது. அனைத்து அணிகளும் ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து, ஐபிஎல்லுக்காக தயாராக உள்ளன.
ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 30 வரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய 6 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளதாக தெரிகிறது.
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்கள் மற்றும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தொடரை நடத்தியதால், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்தும் முறை அறிந்து, அதில் அனுபவமும் பெற்றிருப்பதால், இந்த 6 நகரங்களில் மட்டும் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் இதுகுறித்தெல்லாம் ஆலோசனை நடத்தப்பட்டு, பின்னர் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.