பும்ரா, போல்ட்டையெல்லாம் பொளந்து கட்டிய ராயுடுவுக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதி..! ஹர்பஜன் சிங்கின் ரௌத்திரம்
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு புறக்கணிக்கப்பட்டது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த அம்பாதி ராயுடு, கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதிலாக உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார்.
உலக கோப்பைக்கு முந்தைய ஒன்றரை ஆண்டாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு, நம்பிக்கையளித்து வந்த அம்பாதி ராயுடுவுக்கு, உலக கோப்பைக்கான அணியில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டு, கடைசி நேரத்தில் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் கழட்டிவிட்டது, அவருக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராயுடு உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்த அதிருப்தியை பல முன்னாள் வீரர்களும் அப்போதே வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் நெருக்கடியான சூழலில் பேட்டிங் இறங்கி, பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகிய உலகத்தரம் வாய்ந்த முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 48 பந்தில் 71 ரன்களை குவித்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் ராயுடு. இதையடுத்து மீண்டும் அனைவராலும் நினைவுகூரப்படுகிறார்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அவரது பேட்டிங்கை கண்டு நெகிழ்ந்த ஹர்பஜன் சிங், அவருக்காக மீண்டுமொருமுறை குரல் கொடுத்துள்ளார்.
உலக கோப்பை அணியில் ராயுடு புறக்கணிக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாக்கிற்கு பேசிய ஹர்பஜன் சிங், ராயுடுவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. உலக கோப்பை அணியில் அவரை புறக்கணித்தது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி. அவர் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் இருந்திருக்க வேண்டும். மீண்டுமொரு முறை தனது திறமையை நிரூபித்துள்ளார் ராயுடு என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.