ஐபிஎல் 2020: இந்த சீசனில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் இவரா..? செம சர்ப்ரைஸ் செலக்ஷன்
ஐபிஎல் 13வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆர்சிபி அணிக்கு செம சர்ப்ரைஸ் ஆப்சன் ஒன்றை கவுதம் கம்பீர் வழங்கியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் கடந்த 19ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், இரண்டாவது போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணியும் வெற்றி பெற்றன.
வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, முதல் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.
இந்த சீசனில் ஆர்சிபி அணி காம்பினேஷன் வெகுசிறப்பாக உள்ளதாக கேப்டன் கோலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த சீசனை ஆர்சிபி பெரிதும் எதிர்நோக்கியுள்ளது.
ஆர்சிபியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஃபின்ச், பார்த்திவ் படேல், ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் இருப்பதால் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், விராட் கோலி, வாஷிங்டன் சுந்தரை எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை காண ஆவலாக உள்ளேன். சுந்தர் புதிய பந்தில் பவர்ப்ளேயில் அருமையாக வீசக்கூடிய பவுலர் மட்டும் கிடையாது. நல்ல பேட்ஸ்மேனும் கூட. எனவே அவர் எந்த வரிசையில் பேட்டிங் ஆடப்போகிறார் என்று நான் எதிர்நோக்கியிருக்கிறேன். என்னை பொறுத்தமட்டில் சுந்தரை தொடக்க வீரராக இறக்கலாம். விரைவில் ஸ்கோர் செய்து கொடுக்கக்கூடிய நல்ல பேட்ஸ்மேன் அவர் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் நல்ல பேட்ஸ்மேன் தான் என்றாலும் அவருக்கு ஐபிஎல்லில் இதுவரை பெரியளவில் பேட்டிங் ஆடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததில்லை. அதனால் 21 போட்டிகளில் 75 ரன்களை மட்டுமே சுந்தர் அடித்துள்ளார். இந்நிலையில் தான் அவரை தொடக்க வீரராக இறக்க கம்பீர் பரிந்துரைத்துள்ளார்.