- Home
- Politics
- ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்து கட்சி தொடங்கிய ஜி.கே மூப்பனார் பின்னர் 2001-ல் அதிமுக உடனேயே கூட்டணி வைத்த சுவாரஸ்ய கதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூப்பனார் தாமாக தொடங்கிய கதை
தமிழக அரசியலில் ஜி.கே மூப்பனார் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தார். தமிழகத்திலிருந்து பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளாக மூப்பனார் திகழ்ந்தார். தமிழகத்தில் காங்கிரசை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்த அவர், 1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? அதன் பின்னர் தாமாக என்ன ஆனது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டணி
ஜெயலலிதா முதல்முறையாக 1991 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்திருந்தார். 1991-1996 அவர் ஆட்சி காலத்தில் பல ஊழல் புகார்கள் எழுந்தன. ஏன் ஜெயலலிதா மீது கூட சொத்து குவிப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்த காங்கிரஸ்காரர்கள் அதிமுகவுடனான கூட்டணியை விரும்பவில்லை. ஆனால் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு எடுத்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்த மூப்பனார்
நரசிம்மராவின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்த மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். ஜெயலலிதாவின் ஆட்சி மீது இருந்த ஊழல் புகார்கள் மற்றும் மக்கள் அதிமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தியில் இருந்ததால், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என முப்பனார் கருதினார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை மீறி டெல்லி தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்த அவர், தனது ஆதரவாளர்களுடன் அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
அதிமுக ஆட்சியை விரும்பாத மூப்பனார்
ஜெயலலிதாவிற்கும் மூப்பனாருக்கும் நேரடி தனிப்பட்ட பகை என்பதை விட அரசியல் கொள்கை மற்றும் ஆளுமை ரீதியிலான முரண்பாடுகள் அதிகம் இருந்தன. மேலும் 1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நிலவிய ஊழல்கள் மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம் ஆகியவை மூப்பனாரை அவரிடமிருந்து அந்தியப்படுத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சியை பெரியண்ணன் மனதுடன் ஜெயலலிதா நடத்திய விதம் மூப்பனாருக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதில் மூப்பனார் உறுதியாக இருந்தார்.
திமுக-தாமாக கூட்டணி
இதற்கிடையில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தாமாக கூட்டணி அமைந்தது. இந்த தேர்தலில் திமுக 173 இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் 41 இடங்களை வென்று இருந்தது. திமுக தலைமையிலான கூட்டணி 221 இடங்களில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அதிமுக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
2001-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த மூப்பனார்
இதற்கிடையில் 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசை கவிழ்த்த பின்னர் ஜெயலலிதா பாஜக உடனான உறவை முறித்துக் கொண்டார.. அந்த சமயம் 1999 திமுக, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்தது. திமுகவின் இந்த முடிவை மூப்பனார் கடுமையாக எதிர்த்தார். தீவிர மதச்சார்பற்ற கொள்கை கொண்ட அவர் பாஜக கூட்டணியில் இருக்க விரும்பவில்லை. 1999 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்து அதில் தோல்வியைத் தழுவினார்.
திமுகவை வீழ்த்தவும், தனது கட்சியின் இருப்பை தக்க வைக்கவும் ஒரு பெரிய திராவிட கட்சியின் துணை தேவை என்பதை மூப்பனார் உணர்ந்தார். அப்போது ஜெயலலிதா மூப்பனாரை தேடிச் சென்று ஆதரவு கோரினார். இதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக-தாமாக கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி தேர்தலில் மகத்தாற வெற்றி பெற்றது.
தாமாக காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு
2001 ஆம் ஆண்டு ஜி.கே மூப்பனார் காலமானார். அவருக்கு பின்னர் அவரது மகன் ஜி.கே வாசன் தாமாகாவின் தலைவர் ஆனார். ஆனால் அவரால் கட்சியை நடத்த முடியாத காரணத்தினால் 2002 ஆம் ஆண்டு சோனியா காந்தி முன்னிலையில் தாமாகவை தனது தாய் கட்சியான காங்கிரஸ் உடன் இணைத்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் 2014இல் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
NDAவின் அங்கமான தாமாக
அதிமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய மூப்பனார் இறுதியில் எப்படி அதிமுகவுடன் இணைந்தாரோ, அதேபோல ஜி.கே வாசனும் தனது தந்தை இறுதிவரை எதிர்த்த பாஜகவின் அங்கமாக தாமாகவை மாற்றிவிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.

