ஐபிஎல் 2020: தோனியின் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்பயர்.. இது ரொம்ப அதிகப்பிரசங்கித்தனம் தல
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் அதிருப்தியை ஏற்று, அம்பயர் தனது முடிவை மாற்றிக்கொண்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்டது. முதல் 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன், மோசமான நிலையில் இருந்த சிஎஸ்கே அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆடிய சிஎஸ்கே அணி, வெற்றி பெற்றது.
பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த சிஎஸ்கே, டுப்ளெசிஸ் டக் அவுட்டானபோதிலும், நேற்றைய போட்டியில் வாட்சன், ராயுடு, தோனி, சாம் கரன், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, 168 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது சிஎஸ்கே.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, 18வது ஓவரை சிஎஸ்கே பவுலர் ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தை அவர் வைடாக வீச, அதற்கு வைடு கொடுக்க முற்பட்டார் அம்பயர் பால் ரேஃபில். வைடு கொடுக்க அம்பயர் பால் கையை தூக்க முயல்வதை கண்ட தோனி, அது வைடு அல்ல என்று தனது அதிருப்தியை கோபமாக வெளிப்படுத்தினார். தோனியின் அதிருப்தி கலந்த கோபத்தை கண்ட அம்பயர் பால், தனது வைடு முடிவிலிருந்து பின்வாங்கினார்.
அம்பயர் தனது முடிவை திடமாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து, சம்மந்தப்பட்ட அணியின் கேப்டனின் கோபத்திற்காக தனது முடிவை மாற்றக்கூடாது. இந்த விஷயத்தில் தோனியின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பேட்ஸ்மேன் ரஷீத் கான் ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி நகரக்கூட இல்லை; நின்ற இடத்தில் நின்றே அந்த பந்தை அடிக்க முயன்றார். எனவே அகலக்கோட்டுக்கு வெளியே சென்ற அந்த பந்து வைடுதான். ஆனால் தோனியின் எதிர்ப்பால் அந்த முடிவை அம்பயர் திரும்பப்பெற்று, வைடு கொடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தோனியின் செயல்பாட்டையும், அவரது எதிர்ப்பால் முடிவிலிருந்து பின்வாங்கிய அம்பயரின் செயல்பாட்டையும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்துவருகின்றனர்.
இந்த சம்பவம் நடக்கும்போது, வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் வீரர் இயன் பிஷப், அம்பயர்களின் பணி மிகக்கடினமானது; எனவே அவர்கள் மீது எனக்கு எப்போதுமே இரக்கப்பார்வை உண்டு. ஆனால் அம்பயர் பால் செய்தது தவறு. அது வைடு என்று தெரிந்தும், தோனியை பார்த்தபின்னர், முடிவை மாற்றியது தவறு என்றார்.