ஐபிஎல் 2021: வில்லியம்சனை கழட்டிவிடும் சன்ரைசர்ஸ்..? வார்னர் அதிரடி
ஐபிஎல் அடுத்த சீசனில் வில்லியம்சனை கழட்டிவிடுவது குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த சீசனுக்கான ஏலம் பெரிய ஏலமாக நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை. சிஎஸ்கே அணி, அடுத்த பத்தாண்டுக்கான அணியை கட்டமைக்கும் முனைப்பில் உள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலம் பெரிய ஏலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி மெகா ஏலமாக இருக்கும்பட்சத்தில், அனைத்து அணிகளும் பெரும்பாலான வீரர்களை கழட்டிவிட வேண்டும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். அந்தவகையில், சன்ரைசர்ஸ் அணி, கேப்டன் வார்னர் மற்றும் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆகிய இருவரையும் கண்டிப்பாக தக்கவைக்கும்.
அப்படி அவர்கள் இருவரையும் தக்கவைத்தால், கேன் வில்லியம்சனை கழட்டிவிட நேரிடும். வில்லியம்சன் உலகின் தலைசிறந்த டாப் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே அவரை கழட்டிவிடுவது சரியான முடிவாக இருக்காது. சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையான, மிகச்சிறந்த கேப்டனும் கூட.
ரசிகர்கள் பலரும் வில்லியம்சனை சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிடக்கூடாது என கருத்து தெரிவித்துவருகின்றனர். தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். அந்தவகையில் ரசிகர் ஒருவர், வார்னரிடம் டுவிட்டரில், சன்ரைசர்ஸ் அணி வில்லியம்சனை கழட்டிவிடுமா என்று கேட்ட கேள்விக்கு, அவரை நாங்கள் இழக்கமாட்டோம் என்று பதிவிட்ட வார்னர், வில்லியம்சனை தக்கவையுங்கள் என்று கூறிய ரசிகருக்கு, கண்டிப்பாக.. கவலைப்படாதீர்கள். அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கும் என நம்புகிறேன். எனக்கு அணியில் அவர் வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.