ஐபிஎல் 2020: ஹார்ட் பீட் எகிறிடுச்சு.. இன்னக்கி நான்; நாளைக்கு யாரோ..? - சுனில் நரைன்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், த்ரில்லான கடைசி ஓவரை வீசியது குறித்து சுனில் நரைன் பேசியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு அதிர்ஷ்டமில்லாத சீசனாக அமைந்துள்ளது. இந்த சீசனில் நன்றாக ஆடியும், கடைசி ஒருசில ஓவர்களில் எதிரணிக்கு வெற்றியை தாரைவார்த்துவருகிறது பஞ்சாப் அணி.
கடைசி ஒருசில ஓவர்களில் சொதப்புவதை தொடர்ந்து செய்துவரும் பஞ்சாப் அணி, கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அதே தவறை செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்து, 165 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்தது. 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் வழக்கம்போலவே சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து 14.2 ஓவரில் 115 ரன்களை குவித்தனர்.
39 பந்தில் 56 ரன்கள் அடித்து மயன்க் அகர்வால் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் தலைகீழாக திரும்பியது. பூரான் 16 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, களத்தில் ஒருமுனையில் நிலைத்து ஆடி கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க நினைத்த ராகுல் 74 ரன்களில் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்னே பஞ்சாப்பின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் கடைசி சில ஓவர்களில் சரியாக ஆடாததால் நெருக்கடி அதிகரித்தது. 19 ஓவரில் 151 ரன்கள் அடித்த நிலையில், கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.
த்ரில்லான கடைசி ஓவரை சுனில் நரைன் வீச, கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன் அடித்த மேக்ஸ்வெல், 2வது பந்தில் ரன் அடிக்காமல் 3வது பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, நான்காவது பந்தில் சிங்கிள் ஓடினார். ஐந்தாவது பந்தில் மந்தீப் சிங் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி டை ஆக்க நினைத்த மேக்ஸ்வெல், சுனில் நரைன் வீசிய பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கியடித்தார். பந்து பவுண்டரி லைனுக்கு சற்று முன் பிட்ச் ஆனதால் பவுண்டரியே கிடைத்தது. அதனால் 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கேகேஆர் அணி.
போட்டிக்கு பின்னர், கடைசி ஓவரை வீசிய பதற்றத்திலிருந்து மீளாமல், அந்த த்ரில்லான ஓவரை வீசிய சுனில் நரைன் பேசும்போது, கடைசி பந்தை ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாகத்தான் வீச நினைத்தேன். அதேபோல சரியாகத்தான் வீசினேன். ஆனால் மேக்ஸ்வெல் தூக்கியடித்ததும், அது சிக்ஸர் என்றே நினைத்தேன். டெத் ஓவரை இவர் தான் வீச வேண்டும் என்பதல்ல; ஆனால் யாராவது ஒருவர் வீசித்தானே ஆகவேண்டும். எந்த சூழலிலும் எனக்கு கொடுக்கும் ரோலை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.
ஆடுகளம் போகப்போக ஸ்லோ ஆனது. கடைசி ஓவரை வீசும்போது இதயத்துடிப்பு எகிறிவிட்டது. கடைசி ஓவரை வீசுவது மிகக்கடினம். ஆனால் யாராவது ஒரு வீசித்தானே ஆக வேண்டும். இன்று நான்.. நாளை யாரோ என்று தெரிவித்தார்.