ஐபிஎல் 2020: முட்டாள்தனம் பண்ணிட்டீங்க.. மும்பை இந்தியன்ஸை விளாசிய கவாஸ்கர்
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் தவறிழைத்துவிட்டதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கமாக புள்ளி பட்டியலில் பின்னால் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த முறை வெற்றிகரமாக தொடங்கி புள்ளி பட்டியலில் டாப்பில் இருக்கும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளனா மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் பின்னால் இருக்கின்றன.
ஆனால் இது சீசனின் தொடக்கம் தான் என்பதால், போகப்போக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஐபிஎல்லில் எந்தவிதமான சூழலையும் எதிர்கொண்டு வெற்றிகளை பெறும் உத்தியறிந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மாதிரியான வலுவான அணிகள் எளிதாக கம்பேக் கொடுத்துவிடும்.
இந்த சீசனில் இதுவரை 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இஷான் கிஷானும் பொல்லார்டும் இணைந்து அருமையாக ஆடி போட்டியை டையில் முடித்தனர்.
அந்த போட்டியில் இஷான் கிஷானின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. 99 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்ற இஷான் கிஷான், கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் 99 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி பந்தில் பொல்லார்டு பவுண்டரி அடிக்க போட்டி டை ஆனது.
இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் இஷான் கிஷானை பேட்டிங் ஆட அனுப்பாமல், பொல்லார்டுடன் பாண்டியாவை அனுப்பியது. பாண்டியாவிற்கு சரியாக ஷாட் கனெக்ட் ஆகவேயில்லை. அதனால் சூப்பர் ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்து 8 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, கோலியும் டிவில்லியர்ஸும் அசால்ட்டாக அடித்துவிட்டனர்.
இந்த போட்டியில் சூப்பர் ஓவரில், இஷான் கிஷானைத்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இஷான் கிஷான் இன்னிங்ஸ் முழுக்க ஆடியதால் களைப்பாக இருந்ததால், அவரை இறக்கவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
gavaskar