ஐபிஎல் 2020: உங்க கேப்டன் என்பதால் பவுன்ஸர் போடலையா..? டாம் கரன், ஆர்ச்சரை கையும் களவுமாக பிடித்த கவாஸ்கர்
கேகேஆர் அணியில் ஆடும் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு, ராஜஸ்தான் அணியில் ஆடும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் டாம் கரனும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் பவுன்ஸர் வீசாதது குறித்து சந்தேகப் பார்வையுடன் கேள்வியெழுப்பியுள்ளார் கவாஸ்கர்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனும் வர்ணனையாளருமான கவாஸ்கர் எழுப்பிய ஒரு கேள்வி, ஒரு பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது. 175 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியை 137 ரன்களுக்கு சுருட்டி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி.
இந்த போட்டியில் கேகேஆர் அணி வீரரும் இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் கேப்டனுமான இயன் மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடித்து, கேகேஆர் அணி 174 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். கடைசி வரை களத்தில் நின்று கேகேஆர் அணி அந்த ஸ்கோரை எட்ட உதவினார்.
அந்த போட்டியில், கேகேஆருக்கு எதிராக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் டாம் கரன் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரும் ஆடுகின்றனர். ஆர்ச்சர் சராசரியாக 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர்; குறிப்பாக பேட்ஸ்மேனின் உடலுக்கு நேராக மிரட்டலான பவுன்ஸர்களை வீசக்கூடியவர்.
ஆனால் ஆர்ச்சரும் சரி, டாம் கரனும் சரி, இயன் மோர்கனுக்கு டெத் ஓவர்களில் பவுன்ஸர் வீசவில்லை. டாம் கரன் வீசிய 18வது ஓவரை மோர்கன் எதிர்கொண்டபோது, மோர்கனுக்கு ஒரு ஃபுல் டாஸ் வீசினார் டாம் கரன். அந்த ஃபுல் டாஸை மோர்கன் பவுண்டரிக்கு விரட்டினார்.
இதையடுத்து, அதைக்கண்ட வர்ணனையாளர் கவாஸ்கர், மிக எளிதான ஃபுல்டாஸை டாம் கரன், அவரது கேப்டனுக்கு போட்டுக்கொடுத்துள்ளார். அதை கரனின் கேப்டன் எளிதாக பவுண்டரிக்கு விரட்டிவிட்டார். முந்தைய ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரும் மோர்கனுக்கு பவுன்ஸர் வீசவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மோர்கன் ஒரு பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடிவாங்கினார். எனவே ஒரு அணியின் அதிவேக பவுலராக, ஆர்ச்சர் மோர்கனுக்கு பவுன்ஸர் வீசியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் வீசவில்லை என்றார்.
டாம் கரனும் ஆர்ச்சரும், தங்களது சர்வதேச அணி கேப்டன் மீது கரிசனம் காட்டினார்களா என்கிற ரீதியில் கவாஸ்கர் எழுப்பிய கேள்வி நியாயமானதுதான் என்றவகையில், இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.