ஐபிஎல் 2020: உனக்கு தலை வணங்குகிறேன் “தல”..! ஸ்ரீசாந்த் மரியாதை
தோனியின் விட்டுக்கொடுக்காத மனநிலைக்கும், அவரது அர்ப்பணிப்புக்கும் தலைவணங்குவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் தோனிக்கும் நல்ல தொடக்கமாக அமையவில்லை.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சரியான ரிதமுக்கு திரும்பாதது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டுப்ளெசிஸை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை.
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் சொதப்பல் தொடர்ந்தது. 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட சிஎஸ்கே அணியை தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து கரைசேர்க்க முயன்றனர். ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் படுமந்தமாக ஆடிவிட்டதால் கடைசியில் இலக்கை விரட்ட முடியாமல் போனது. 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே.
7வது ஓவரிலேயே களத்திற்கு வந்த தோனி, கடைசி வரை களத்தில் நின்றும் இலக்கை விரட்ட முடியவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் சீதோஷ்ண நிலையை எதிர்கொண்டு ஆட, இளம் வீரர்களே திணறும் நிலையில், 39 வயதான தோனி, முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்துவிட்டு, பேட்டிங்கிலும் 13 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று ஆடினார்.
ஆனாலும் கடும் களைப்படைந்த தோனியால், கடைசியில் அவர் எதிர்பார்த்ததை போல பெரிய ஷாட்டுகளை எளிதாக ஆடமுடியவில்லை. பேட்டிங் ஆடும்போது களத்தில் தோனி களைப்பாறியதை கண்டு ரசிகர்களே கலங்கினர். ஆனாலும் போராட்ட குணம் கொண்ட தோனி, கடைசிவரை தளராமல் போராடினார்.
தோனியின் அர்ப்பணிப்பு மற்றும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடியதற்காக அவருக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த்.