ஐபிஎல் 2020: கேப்டன் பதவிக்கு தினேஷ் கார்த்திக் லாயக்கு இல்ல; உடனே கேப்டனை மாத்துங்க..! ஃபாஸ்ட் பவுலர் அதிரடி
அணியை முன்னின்று வழிநடத்தும் வீரரே கேப்டனாக இருக்க வேண்டும்; எனவே கேகேஆர் அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த சீசனில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள், இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3ல் வென்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
கேகேஆர், சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஆடிய 4 போட்டிகளில் தலா 2ல் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே இருந்துவந்தது. அதற்கு காரணம், அந்த அணி இந்த சீசனில் இங்கிலாந்தின் உலக கோப்பை வின்னிங் கேப்டன் இயன் மோர்கனை எடுத்ததுதான்.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே, இந்த சீசனின் இடையிலேயே தினேஷ் கார்த்திக் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு மோர்கன் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அதேபோல தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, இளம் திறமையான, பக்குவமான, முதிர்ச்சியான பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லை கேப்டனாக்க வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீசாந்த்தும், தினேஷ் கார்த்திக்கை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, இயன் மோர்கனை கேப்டனாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, 20 ஓவரில் 228 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 229 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில், நிதிஷ் ராணா, மோர்கன், ராகுல் திரிபாதி ஆகிய மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர்.
13.3 ஓவரில் 122 ரன்களுக்கே கேகேஆர் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் டெத் ஓவர்களில் இயன் மோர்கனும் ராகுல் திரிபாதியும் பெரிய ஷாட்டுகளை ஆடி கடுமையாக போராடினர். ஆனாலும் ஸ்கோர் நிறைய தேவைப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தத்தால் அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் அடித்து ஆடிய மோர்கன் 18 பந்தில் 44 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, கேகேஆர் அணி 210 ரன்களை குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 பந்தில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார். இதுவரை ஆடிய 4 போட்டிகளில் வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
ஒரு அணியின் கேப்டன் என்பவர் அணியை விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி போன்று முன்னின்று வழிநடத்த வேண்டும். கேகேஆர் அணியில் அப்படிப்பட்ட, முன்னின்று வழிநடத்தும் வீரர் மோர்கன் தான். எனவே அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஒரு கேப்டனாக சிறப்பாக ஆடி, முன்னின்று அணியை வழிநடத்தும் வீரர் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் கிடையாது. எனவே அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, இயன் மோர்கனை கேப்டனாக்க வேண்டும் என்று ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.