500 மேட்ச் ஆடியிருக்கேன்.. என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்..! சர்ச்சைக்கு செம கெத்தா பதிலடி கொடுத்த தாதா
தன் மீதான சர்ச்சைக்கு வழக்கம்போலவே செம கெத்தாக பதிலடி கொடுத்து சர்ச்சையை கிளப்பியவர்களின் வாயை அடைத்துள்ளார் கங்குலி.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி, பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹெட்மயர், ரபாடா ஆகிய இளம் வீரர்களையும், தவான், ரஹானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்வின், அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா ஆகிய அனுபவ வீரர்களையும் கொண்ட இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த அணியாக திகழ்கிறது.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வெற்றிகரமான கேப்டனுமான ரிக்கி பாண்டிங், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் பக்கபலமாக திகழ்கிறார்.
கடந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி இருந்தார். கங்குலி, பாண்டிங் ஆகிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன்களை தனது பயிற்சியாளர்களாக பெற்றிருந்ததால், அவர்களிடமிருந்து நிறைய கேப்டன்சி உத்திகளை கற்று, ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் நிறைய மேம்பட்டுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு வெற்றிக்கு பின்னர் பேசும்போது, தான் ஒரு கேப்டனாக சிறந்து விளங்க கங்குலி மற்றும் பாண்டிங் ஆகிய இருவருமே காரணம் என்றும், கங்குலியின் வழிகாட்டுதலின் படியும் பாண்டிங்கின் ஆலோசனையின்படியுமே தான் செயல்பட்டுவருவதாகவும் நன்றி கூறினார் ஷ்ரேயாஸ் ஐயர்.
ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதை சிலர் சர்ச்சையாக்கினர். அதாவது பிசிசிஐயின் தலைவராக இருக்கும் கங்குலி, ஒரு குறிப்பிட்ட வீரருக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும் என்று, ஷ்ரேயாஸ் ஐயர் நல்லவிதமாக கூறிய விஷயத்தை சர்ச்சையாக்கினர். இதையடுத்து, தான் கூறிய விஷயம் திரித்து பரப்பப்பட்டதாகவும், இளம் வீரரான தனக்கு கங்குலி மற்றும் பாண்டிங்கின் அறிவுரைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதை தெரிவிப்பதற்காகவே தான் கங்குலியை பற்றி பேசியதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கங்குலியே விளக்கமளித்து தெளிவுபடுத்திவிட்டார். இதுகுறித்து பேசிய கங்குலி, நான் இப்போதுதான் பிசிசிஐ தலைவர். அதற்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர். நான் 500 போட்டிகளில் ஆடியிருக்கிறேன். எந்த வீரருக்கும் என்னால் அறிவுரை கூற முடியும். இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு அறிவுரை கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? கோலியோ ஷ்ரேயாஸ் ஐயரோ யாருடைய வளர்ச்சிக்கு வேண்டுமானாலும் நான் உதவுவேன் என்று கங்குலி செம கெத்தாக விளக்கமளித்துள்ளார்.