ஐபிஎல் 2020: கோலி - ஏபிடி பேட்டிங்கை படுமோசமா பங்கம் செய்த சேவாக்..! செம கலாய்
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி - டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் பேட்டிங்கை செம கலாய் கலாய்த்துள்ளார் சேவாக்.
ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனில் அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி, 20 ஓவரில் வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்தது. சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான அரைசதத்தால் அந்த 146 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலே அடித்து சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கோலி - டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 ஓவர்கள் பேட்டிங் ஆடியபோதிலும், அந்த 10 ஓவர்களில் 82 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி ஐபிஎல்லின் அபாயகரமான ஜோடி. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நிலைத்துவிட்டால், ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேற லெவலில் இருக்கும்.
ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இருவரையும் எந்த சூழலிலும் அடித்து ஆடி ஆதிக்கம் செலுத்தவிடாமல் கட்டுப்படுத்தினர் சிஎஸ்கே பவுலர்கள்.
மிடில் ஓவர்களில் அவர்களை பெரிதாக அடித்து ஆடவிடாமல் கட்டுப்படுத்தியதுடன், களத்தில் நிலைத்துவிட்ட அவர்கள் இருவரும் டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கவிடாமல், 18வது ஓவரில் டிவில்லியர்ஸையும் 19வது ஓவரில் கோலியையும் வீழ்த்தியது சிஎஸ்கே அணி.
அதனால் கோலியும் டிவில்லியர்ஸும் இணைந்து 10 ஓவர்கள் பேட்டிங் ஆடியும் அந்த அணி 20 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
டிவில்லியர்ஸ் 36 பந்தில் 39 ரன்களும் கோலி 43 பந்தில் 50 ரன்களும் மட்டுமே அடித்தனர். கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன் மட்டுமே அடித்தனர்.
சிஎஸ்கேவிற்கு எதிரான கோலி மற்றும் டிவில்லியர்ஸின் மந்தமான பேட்டிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார் சேவாக்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், கோலியும் டிவில்லியர்ஸும் 7வது ஓவரிலிருந்து 18வது ஓவர் வரை ஆடிய ஆட்டம் கோமாவில் இருந்ததை போல் இருந்தது. நான் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு எழுந்து வருகிறேன்.. அதுவரை கொஞ்சம்கூட இன்னிங்ஸின் வேகத்தை அதிகப்படுத்தாமல் மந்தமாகவே ஆடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பெரிய ஷாட்டுகளை ஆட எந்த தருணத்திலும் தொடங்கவில்லை. டிவில்லியர்ஸை அடித்து ஆடவிடாமல் 18வது ஓவரில் அவுட்டாக்கி 145 ரன்களுக்கு சிஎஸ்கே பவுலர்கள் சுருட்டினர் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.