ஐபிஎல் 2020: கேஎல் ராகுலின் மட்டமான கேப்டன்சியை கண்டு தலையில் அடித்துக்கொண்ட சச்சின் டெண்டுல்கர்..!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் மோசமான கேப்டன்சியை கண்டு சச்சின் டெண்டுல்கர் தலையில் அடித்துக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.
இந்த சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவும் நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக முதலிரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியது பஞ்சாப் அணி. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், சூப்பர் ஓவரில் தோற்ற பஞ்சாப், ஆர்சிபியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆனால் அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல், வெறும் 143 ரன்கள் மட்டுமே அடித்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் கேஎல் ராகுலின் கேப்டன்சி மோசமாகவே இருந்தது. டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த ராகுல், மும்பை இந்தியன்ஸை முடிந்தளவிற்கு குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்த தவறிவிட்டார். ரோஹித் சர்மா அருமையாக ஆடி 70 ரன்களை குவித்தார். டெத் ஓவர்களில் பவர் ஹிட்டர்கள் பொல்லார்டும் பாண்டியாவும் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷெல்டான் கோட்ரெல் அதிகமான ரன்களை வாரி வழங்கியதையடுத்து, நேற்றைய போட்டியில் அவரை டெத் ஓவரில் வீசவைக்க தயக்கம் காட்டிய ராகுல், அவரது பவுலிங் கோட்டாவை விரைவில் முடித்துவிட்டதால், கடைசி ஓவரை ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை வீசவைக்க வேண்டிய சூழல் உருவானது. களத்தில் நின்றதோ பவர் ஹிட்டர்கள் பொல்லார்டும் பாண்டியாவும்.
அந்த நிலையில், கேஎல் ராகுலுக்கு வேற ஆப்சனும் இல்லை. எனவே கௌதமை வீசவைத்தார். கடைசி ஓவரில் மட்டும் பாண்டியா ஒரு சிக்ஸர், பொல்லார்டு 3 சிக்ஸர்கள் என மொத்தம் 4 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. கடைசி 3 ஓவரில் மட்டும் 62 ரன்களை குவித்து, 191 என்ற மெகா ஸ்கோரை அடித்தது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, செம ஃபார்மில் இருக்கும் மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுலை பக்காவாக பிளான் போட்டு விரைவிலேயே வீழ்த்தி, பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் தடுத்து, வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
sachin tendulkar
இதுகுறித்து டுவீட் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், 191 என்பது துபாய் மைதானத்தில் சவாலான டோட்டல். ரோஹித் சர்மா அருமையாக இன்னிங்ஸை பில்ட் செய்து ஆடினார். பாண்டியாவும் பொல்லார்டும் களத்தில் நிற்கையில், 20வது ஓவரை ஆஃப் ஸ்பின்னரை வீசவைப்பதா என்று தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜியை பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.