மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமான அணியாக திகழ இதுதான் காரணம்..! லெஜண்ட் ராகுல் டிராவிட் அதிரடி
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கோலோச்சுவதற்கான காரணத்தை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் முறையாக இந்த சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
ரோஹித் சர்மா கேப்டன்சியில் ஆடிய 8 சீசன்களில் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று, ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் அசைக்கமுடியாத மாபெரும் சக்தி வாய்ந்த அணியாக திகழும் நிலையில், அதற்கான காரணத்தை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணியாக திகழ முக்கியமான காரணம், அனுபவம் வாய்ந்த மற்றும் டி20 கிரிக்கெட்டின் உலகத்தரம் வாய்ந்த சீனியர் வீரர்களை கொண்ட கோர் டீமை கட்டிக்காப்பதுதான்.
அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமல்லாது திறமையான, துடிப்பான இந்திய இளம் வீரர்களையும் பெற்றிருப்பதுதான். இளம் வீரர்களை அடையாளம் காணும் வலுவான அமைப்பை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. அதன்மூலம் திறமையான இளம் வீரர்களை அடையாளம் காண்கிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
மும்பை அணியில் ரோஹித், பொல்லார்டு ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், டி காக், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய அசாத்திய இளம் திறமை வாய்ந்த வீரர்களும் உள்ளனர். எனவே இளமையும் அனுபவமும் கலந்த நல்ல பேலன்ஸான, வலுவான அணியாக திகழ்வதால், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கோலோச்சுகிறது.