ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத, இனிமேலும் செய்யவே முடியாத சாதனையை செய்த பூரான்
ஐபிஎல்லில் இதுவரை யாருமே செய்திராத, இனிமேலும் யாரும் செய்ய முடியாத அளவிற்கு ஒரு மோசமான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான்.
ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடள்ஸ் அணி ஓவரில் 157 ரன்கள் அடித்தது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, பிரித்வி ஷா, தவான், ஹெட்மயர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 13 ரன்களுக்கே இழந்துவிட்டாலும், அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின்(20 பந்தில் அரைசதம்) கடைசி நேர காட்டடியாலும் 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது.
158 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் மட்டும் தனி ஒருவனாக போராடி 89 ரன்களை குவித்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துவந்தார். ஆனால், போட்டி டை ஆன நிலையில் ஒரு ரன் அடித்து வெற்றியை தேடிக்கொடுக்காமல் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டாக, கடைசி பந்தில் ஜோர்டானும் அவுட்டாக போட்டி டையில் முடிந்தது.
இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சூப்பர் ஓவரில் அதிகபட்சம் 2விக்கெட்டுகள் மட்டுமே என்பதால், ரபாடா அந்த 2 விக்கெட்டையும் வீழ்த்திவிட்டதால், டெல்லி அணிக்கு 3 ரன்கள் என்ற எளிய இலக்கு சூப்பர் ஓவரில் நிர்ணயிக்கப்பட்டது. அதை அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான், அரிதினும் அரிதான ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒரே போட்டியில் 2 முறை டக் அவுட்டானது. 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, மெயின் இன்னிங்ஸில், அஷ்வின் பந்தில் டக் அவுட்டான நிகோலஸ் பூரான், சூப்பர் ஓவரிலும் டக் அவுட்டானார். இதன் மூலம் ஒரே போட்டியில் 2 முறை டக் அவுட்டானார்.
இதற்கு முன் ஐபிஎல்லில் இதுபோன்ற சம்பவம் நடந்ததேயில்லை; இனிமேல் நடப்பதற்கும் வாய்ப்பேயில்லை.