ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவுக்கு இதுதான் காரணம்..!
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷானுக்கு பதிலாக சவுரப் திவாரி எடுக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இஷான் கிஷான் புறக்கணிப்பிற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் கடந்த 19ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடிக்க, ராயுடு மற்றும் டுப்ளெசிஸின் பொறுப்பான அரைசதத்தால் அந்த இலக்கை எட்டி சிஎஸ்கே வெற்றி பெற்றது.
அந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன் அதிர்ச்சிகரமாக இருந்தது. இளம் இடது கை அதிரடி வீரர் இஷான் கிஷான் ஆடும் லெவனில் எடுக்கப்படாமல் சவுரப் திவாரி எடுக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடாத சவுரப் திவாரி, கடந்த சீசனில் ஆடவேயில்லை. அவரை இந்த சீசனுக்கான அணியில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பளித்தது. இஷான் கிஷான் புறக்கணிக்கப்பட்டு சவுரப் திவாரி அணியில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
சவுரப் திவாரி தனது கம்பேக் சான்ஸை வீணடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அணியில் அதிகபட்சமாக அவர் தான் 42 ரன்கள் அடித்திருந்தார்.
இஷான் கிஷான் காயம் காரணமாகத்தான் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பது சிறிய பின்னடைவுதான். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் குல்ட்டர்நைல் கூட காயத்தால் தான் முதல் போட்டியில் ஆடவில்லை.
இஷான் கிஷான் ஃபிட்டானாலும் கூட, சவுரப் திவாரியே தொடர்ந்து ஆடுவார் என தெரிகிறது. ஏனெனில் கடந்த சீசனில் இஷான் கிஷான் ஆறு போட்டிகளில் ஆடி வெறும் 101 ஸ்டிரைக் ரேட்டுடன் 106 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.