ஐபிஎல் 2020: முடிஞ்சா எங்க பிளானை மீறி ராகுல் அடிச்சு பார்க்கட்டும்..! ஷேன் பாண்ட் சவால்
கேஎல் ராகுலுக்கு எதிராக பக்கா திட்டம் கைவசம் இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, அடுத்த போட்டியில் ஆர்சிபியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதன்பின்னர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 223 ரன்களை குவித்தும், அந்த இலக்கை ராஜஸ்தான் விரட்டி வெற்றி பெற்றதால் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அல்டிமேட் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலம். இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் ராகுலும் மயன்க் அகர்வாலும் தான் உள்ளனர்.
ராகுல் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 132 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 222 ரன்களையும் மயன்க் அகர்வால் 221 ரன்களையும் குவித்துள்ளனர்.
ராகுல் சிறப்பாக ஆடினால், அது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எதிரணிகள் அவரை விரைவில் வீழ்த்த வேண்டியது அவசியம். அந்தவகையில், அவருக்கு எதிராக பக்கா திட்டம் வைத்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஷேன் பாண்ட், கேஎல் ராகுல் எங்களுக்கு எதிராக நன்றாக ஆடி ரன்களை குவித்திருக்கிறார். அவர் அருமையான பேட்ஸ்மேன். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர்.
ராகுல் மிடில் ஓவர்களில் அவருக்கான நேரத்தை எடுத்துக்கொள்வார். அதுதான் அவரை வீழ்த்துவதற்கான நேரமும் கூட. அவருக்கும், மற்ற வீரர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். ராகுலை வீழ்த்துவதற்கான பிரத்யேக திட்டங்கள் எங்களிடம் உள்ளது. அவர் எந்தெந்த ஏரியாக்களில் ரொம்ப ஸ்ட்ராங்கோ அங்கெல்லாம் அவரை ஸ்கோர் செய்ய விடாமல் தடுத்துவிடுவோம் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.