பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் செம பேட்டிங்..! சின்ன மைதானம் ஷார்ஜாவில் சிக்ஸர் மழை.. கேகேஆருக்கு கடின இலக்கு
கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 20 ஓவரில் 228 ரன்களை குவித்த டெல்லி கேபிடள்ஸ் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. சின்ன மைதானமான ஷார்ஜாவில் மெகா ஸ்கோர் அடிக்கப்படும் என்பது தெரிந்தே, டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சிறிய மைதானத்தில் கூட பெரியளவில் கூட ஆடாமல், வெறும் 16 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிரித்வி ஷாவுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.
பிரித்வி ஷாவும் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து கேகேஆரின் பவுலிங்கை பொளந்துகட்டினர். கம்மின்ஸ், ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகிய அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினர். இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். மைதானம் சிறியது என்பதால் அதை பயன்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தனர்.
பிரித்வி ஷா 41 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் ஷ்ரேயாஸ் ஐயரும் அடித்து ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரிஷப் பண்ட்டும் 17 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 38 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 88 ரன்கள் விளாசினார். 19 ஓவரிலேயே டெல்லி கேபிடள்ஸ் அணி 221 ரன்களை குவித்தது. கடைசி ஓவரை ஸ்மார்ட்டாக வீசிய ரசல் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸையும் ஒரு ரன்னில் வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்டிரைக்கே கிடைக்காததால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து 20 ஓவரில் 228 ரன்களை குவித்த டெல்லி கேபிடள்ஸ் அணி 229 ரன்களை கேகேஆருக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. கேகேஆரிலும் ஷுப்மன் கில், மோர்கன், ராணா, ரசல் என பவர் ஹிட்டர்கள் இருப்பதாலும், மைதானம் சிறியது என்பதாலும் இந்த இலக்கை கேகேஆரால் விரட்டமுடியும். எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.