ஐபிஎல்லில் அசத்திய இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..? தாதா தடாலடி
ஐபிஎல்லில் அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லின் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் அருமையாக ஆடினர்.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக இறங்கிய தேவ்தத் படிக்கல், அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். இந்த சீசனில் ஐந்து அரைசதங்களுடன் 473 ரன்களை குவித்தார். தேவ்தத் படிக்கல் யுவராஜ் சிங் மற்றும் மேத்யூ ஹைடனுடன் ஒப்பிடப்பட்டார்.
உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் 64.44 என்ற சராசரியுடன் 12 போட்டிகளில் 580 ரன்களை குவித்தார். சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் அருமையாக ஆடியதன் விளைவாகத்தான், ஆர்சிபி அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார் படிக்கல்.
இந்த சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் பிசிசிஐ தலைவர் கங்குலியே கவர்ந்துவிட்டார் படிக்கல். இந்த சீசனில் தன்னை கவர்ந்த வீரர்களில் படிக்கல்லும் ஒருவர் என கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேவ்தத் படிக்கல்லுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, படிக்கல் மிகச்சிறந்த வீரர். டி20 கிரிக்கெட் என்பது முதல் ஸ்டெப் தான். அவரை நான் கர்நாடகாவுக்கும் பெங்காலுக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ரஞ்சி அரையிறுதியிலேயே பார்த்திருக்கிறேன். அவருக்கு திறமை இருக்கிறது; ஃபாஸ்ட் பவுலிங்கை ஆட அவருக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. இன்னும் சில சீசன்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் முதல் சீசனில் ஆடுவதை விட 2வது சீசனில் ஆடுவதுதான் கடினம். இந்திய அணிக்கு ஒபனர் தேவை. அவருக்கான வாய்ப்பு அதற்கான நேரத்தில் கிடைக்கும் என்றார் கங்குலி.