ஐபிஎல் வர்ணனைக்கு வந்த இடத்தில் மும்பையில் உயிரிழந்த ஆஸி., முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ்..! ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் 13வது சீசனுக்கான வர்ணனைக்காக மும்பையில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் நெஞ்சுவலியால் காலமானார். அவருக்கு வயது 59.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் டீன் ஜோன்ஸ், நெஞ்சுவலியால் மும்பையில் காலமானார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர்களில் ஒருவர் டீன் ஜோன்ஸ். அருமையான பேட்ஸ்மேனான அவர், 1984ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 3,631 மற்றும் 6,068 ரன்களை குவித்துள்ளார்.
1987ல் ஆலன் பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் இடம்பெற்று ஆடியவர் டீன் ஜோன்ஸ்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட டீன் ஜோன்ஸ், கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவந்தார். அருமையான வர்ணனையாளர் ஜோன்ஸ். கிரிக்கெட் வர்ணனை என்பது சாதாரண விஷயமல்ல. ரசிகர்களை கவரும் விதமாகவும், அர்த்தம் பொதிந்தும், சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். அந்த வித்தையை அறிந்த டீன் ஜோன்ஸ், தனது வர்ணனையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர்.
59 வயதான டீன் ஜோன்ஸ், ஐபிஎல் வர்ணனைக்காக மும்பைக்கு வந்து மும்பையில் தங்கியிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வர்ணனை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், நெஞ்சுவலியால் அவர் காலமானார். தன் வாழ்வின் கடைசி தருணம் வரை கிரிக்கெட்டுடனேயே இருந்துவிட்டு மறைந்துள்ளார்.
அவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.