ஐபிஎல் 2021 மெகா ஏலம்: தோனியை கழட்டிவிடும் சிஎஸ்கே..? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் 2021 சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன்பாக தோனி கழட்டிவிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சீசன் சிஎஸ்கே அணி மோசமான சீசனாக அமைந்தது. இதற்கு முன் ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் தான் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது.
கடந்த 10 சீசன்களாக வலுவான கோர் டீமுடன் கோலோச்சி வந்த சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. அதனால் இந்த சீசன் மோசமான சீசனாக சிஎஸ்கேவிற்கு அமைந்தது. இந்த சீசனுக்கு முன் ஐபிஎல்லை தவிர அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்த தோனி, இந்த சீசனுடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சீசனில் ஆடுவதை தோனி உறுதி செய்துவிட்டார்.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்க வாய்ப்புள்ளது. அப்படி பெரிய ஏலமாக நடந்தால், புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முனைப்பில் சிஎஸ்கே அணி உள்ளது. அதை தோனியே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், பெரிய ஏலம் நடந்தால், சிஎஸ்கே அணி முதலில் கழட்டிவிட வேண்டிய வீரர் தோனி தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, மெகா ஏலம் நடந்தால் சிஎஸ்கே அணி ஏலத்துக்கு முன் தோனியை கழட்டிவிட வேண்டும். மெகா ஏலம் என்றால், அடுத்த 3 ஆண்டுக்கான வீரர்களை எடுக்க வேண்டும். தோனியை வைத்திருப்பதன் மூலம் ரூ.15 கோடி முடங்கும். அந்த தொகையில் சில வீரர்களை எடுக்க முடியும். எனவே தோனியை கழட்டிவிட்டு, பின்னர் ஏலத்தில் எடுத்தால் அதைவிட குறைவான தொகைக்கு எடுக்க முடியும். Right to match கார்டை பயன்படுத்தி மற்ற அணி எடுக்கும் தொகைக்கு தோனியை இப்போதிருப்பதைவிட குறைவான தொகைக்கு எடுக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இனிமேல் தோனியை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து எந்த அணியும் எடுக்காது என்பதால், தோனியை கழட்டிவிட்டால், இப்போதைய தொகையை விட குறைவான தொகைக்கே அவரை எடுக்க முடியும் என்பது உண்மைதான்.