- Home
- இந்தியா
- 10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும்.. அரசு அறிவிப்பு.. குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும்.. அரசு அறிவிப்பு.. குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
25% பாடத்திட்டம் குறைப்பு என்பது மாணவர்களுக்கு பெரும் நன்மை பயக்கும். பாடங்களின் எண்ணிக்கை குறையும் போது மீதமுள்ள பாடங்களை மாணவர்கள் இன்னும் ஆழமாகவும், நிதானமாகவும் கற்க முடியும்.

10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும்
கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் 25 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று அந்த மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவன்குட்டி, ''மாணவர்கள் அடிக்கடி தங்களின் அதிகப்படியான கல்விப் பணிச்சுமை குறித்து புகார் தெரிவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பாடப்புத்தகங்களில் தற்போதுள்ள பாடங்களில் 25% குறைக்கப்படும்.
அதே வேளையில் பாடப்புத்தகங்களின் அடிப்படை உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த முடிவிற்கு பாடத்திட்டக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
பாடச்சுமை அதிகம் இருந்து வந்தது
10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும் என்ற கேரள அரசின் முடிவுக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. கேரள மாணவர்கள் தங்களுக்கு பாடச்சுமை அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். அதிகப்படியான பாடங்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் படித்து முடிப்பது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை கொடுப்பதாக பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.
பாடத்திட்டக் குழு பரிந்துரை
தேர்வு நேரங்களில் மாணவர்கள் சந்திக்கும் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கவும், பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து புரிந்து படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கவும் பாடத்திட்டத்தை குறைக்கும் முடிவை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாடச்சுமையை குறைப்பது அவசியம் கல்வி நிபுணர்கள் அடங்கிய பாடத்திட்டக் குழு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழக அரசு இதை பின்பற்றுமா?
25% பாடத்திட்டம் குறைப்பு என்பது மாணவர்களுக்கு பெரும் நன்மை பயக்கும். பாடங்களின் எண்ணிக்கை குறையும் போது மீதமுள்ள பாடங்களை மாணவர்கள் இன்னும் ஆழமாகவும், நிதானமாகவும் கற்க முடியும். தெளிவாக கற்றுக்கொண்டு தேர்வுகளில் அதனை எதிரொலிக்க வாய்ப்பாக அமையும்.
மேலும் பெரிய பாடப்புத்தகங்களைப் பார்த்து பயப்படும் மாணவர்களுக்கு, பாடத்திட்டக் குறைப்பு ஒரு பெரிய நிம்மதியைத் தரும். இது தேர்வு பயத்தைக் குறைத்து மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள உதவும். கேரள அரசின் இந்த முடிவை தமிழக கல்வித்துறையும் செயல்படுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

