முக்குலத்தோர் ஓட்டுக்கள் அதிமுக பக்கம் இருந்த காலம் போச்சு! பட்டியலின வாக்குளை கைக்குள் கொண்டு வரும் உதயநிதி.!
புரட்சித்தலைவியின் மறைவிற்குப் பிறகு பட்டியலின மக்கள் அதிமுக-வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனை லாவகமாக கைக்குள் கொண்டு வரவே உதயநிதி முயற்சிக்கிறார் என பூங்குன்றன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பான கருத்துகளை பதிவிட்டு வருகிறது. இந்நிலையில் வெற்றி பெற எது தேவையோ? அதை நோக்கி திமுக-வை உதயநிதி அழைத்து செல்கிறார் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- "சனாதனம்" பற்றி பேசி தன்னுடைய பெயரை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் உதயநிதி அவர்கள். என்னை பொறுத்தவரை அவருடைய பேச்சும், நடவடிக்கையும் வெற்றி பெற எது தேவையோ? அதை நோக்கி திமுக-வை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்றே நினைக்கின்றேன். எதை, எங்கே, எப்போது பேச வேண்டும் என்று அவர் திட்டமிடுவதாகவே தெரிகிறது.
திமுக தனது வெற்றிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்களும் அவர்களை ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இன்னும் கொஞ்சம் எளிதாக வெற்றி பெறுவதற்கு யாருடைய ஓட்டுகள் தேவை? அதை உணர்ந்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வருகிறார். தாத்தாவின் அரசியல் பேரனுக்கு வருவதில் ஆச்சரியமில்லையே..!
முக்குலத்தோர் ஓட்டுக்கள் அதிமுக பக்கம் அதிகமாக இருந்த காலம் போய் இனி அந்த ஓட்டுக்கள் சிதறித்தான் போகும் என்ற நிலை உள்ளது. பெரிய சமுதாயம் கோலோச்ச ஆரம்பித்தால் யார் விலகிப் போவார்கள்? இதற்கான பதிலை அரசியல் தெரியாத மனிதர் கூட சொல்லிவிடுவார். அப்படி புரட்சித்தலைவியின் மறைவிற்குப் பிறகு பட்டியலின மக்கள் அதிமுக-வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனை லாவகமாக கைக்குள் கொண்டு வரவே ஆளும் கட்சி முயற்சிக்கிறது.
அது ஒரு சிறந்த முயற்சி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அமைச்சர் உதயநிதி அவர்களுடைய சமீபத்திய நடவடிக்கைகளும், அவர்களுடைய செயல்பாடுகளும் அதை தெள்ளத் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. மாமன்னனில் ஆரம்பித்து அடுத்தடுத்து காய்களை அழகாக நகர்த்தி வருகிறார். பெரிய சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைக்குள் கொண்டிருக்கிறது.
ஆனால் பட்டியலின மக்கள் எல்லா தொகுதிகளிலும் வெற்றிக்கான வாக்குகளை தங்களிடத்தே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. ஆளும் கட்சி நடத்தும் சதுரங்க ஆட்டத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி காய்களை நகர்த்த போகின்றன? என பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.