- Home
- குற்றம்
- தாலி அறுந்தாலும் பரவாயில்லை! என் புருஷன் உயிரோடு இருக்கக்கூடாது! கள்ளக்காதலனுடன் மனைவி சிக்கியது எப்படி?
தாலி அறுந்தாலும் பரவாயில்லை! என் புருஷன் உயிரோடு இருக்கக்கூடாது! கள்ளக்காதலனுடன் மனைவி சிக்கியது எப்படி?
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்காக மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மவுனிகா, கள்ளக்காதலன் உதயகுமார் மற்றும் கூட்டாளி மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியில் உள்ள மொண்டி கொல்ல தெருவைச் சேர்ந்தவர் நல்லி ராஜு (27). இவரது மனைவி மவுனிகா (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மவுனிகாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 5ம் தேதி மவுனிகா உணவில் 10 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார். சாப்பிட்ட பிறகு தூக்கம் வரவே தனது ரூமுக்கு தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் மல்லிகார்ஜுனுடன் உதயகுமார் வீட்டுக்கு வரவழைத்து ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தி கொலை செய்துள்ளனர்.
அதன் பிறகு ராஜுவின் உடலை உதயகுமாரும், மல்லிகார்ஜூனும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உடலை வீசி விட்டு சென்றனர். இதனையடுத்து வெளியே சென்ற தனது கணவர் நல்லி ராஜூ வீடு திரும்பவில்லை என்று மனைவி மவுனிகா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் 6-ம் தேதி காலை ராஜூ உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றுடன் ஒருவர் சுற்றி திரிவது பதிவாகி இருந்தது. அந்த வண்டியின் பதிவு எண்ணை வைத்து உதயகுமார் என்பவரை பிடித்த விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் மவுனிகாவிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவர் நல்லி ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமார், மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மல்லிகார்ஜூன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.