பிரபல பான்மசாலா உரிமையாளரின் மருமகள் திடீர் தற்கொலை! இதுதான் காரணமா? சிக்கிய கடிதம்!
பிரபல பான் மசாலா நிறுவனமான கமலா பசந்த் உரிமையாளரின் மருமகள் தீப்தி, டெல்லியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் ஹர்பிரீத் ஒரு தென்னிந்திய நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட தகராறே தற்கொலைக்கு காரணம்.

தலைநகர் டெல்லியை சேர்ந்த பிரபல பான் மசாலா நிறுவனமான கமலா பசந்த் மற்றும் ராஜஸ்ரீயின் உரிமையாளர் கமல் கிஷோர். இவரது மகன் ஹர்பிரித் சவ்ராஷ்யா கடந்த 2010ம் ஆண்டு தீப்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 14 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டெல்லி வசந்த் விஹார் பகுதியில் உள்ள வீட்டில் தீப்தி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா? கொலையா? என விசாரித்து வரும் நிலையில் தற்போது தீப்தி அறையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் தீப்தி தனது கணவருடன் தொடர்ந்து நடந்து வந்த தகராறுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு உறவில் அன்பும் நம்பிக்கையும் இல்லை என்றால், அந்த உறவைத் தொடரவும் வாழவும் என்ன காரணம் இருக்கிறது என்று அவர் எழுதியுள்ளார். தீப்தியும் ஹர்பிரித்தும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஹர்பிரீத் தென்னிந்திய திரைப்பட நடிகை ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தீப்திக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இந்த தகராறு மிகவும் முற்றியதால், தீப்தி மிகுந்த மனவேதனையில் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். தீப்தியை தற்கொலைக்குத் தூண்டியதாக குடும்பத்தினர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போது போலீசார் இந்த கோணத்திலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கமலா பசந்த் பான் மசாலாவின் பயணம் கான்பூரில் ஒரு சிறிய கடையில் தொடங்கி, இன்று கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால் பெரிய நிறுவனங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் குடும்பத் தகராறுகள் பெரும்பாலும் வெளிவருவதில்லை.

