திடீர் திருமணம் செய்தது ஏன்? சமந்தாவின் ரூட்டுக்கு காய் நகர்த்தும் 'கயல்' ஆனந்தி!
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி திடீர் என கயல் ஆனந்தி இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் முறையாக இந்த திடீர் திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் 'கயல்' ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என ஜனவரி 7 ஆம் தேதி இரகசிய திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய திருமணம் குறித்து தெரிவித்துள்ள கயல் ஆனந்தி, கடந்த 4 வருடங்களாக இணை இயக்குனர் சாக்ரடீஸை காதலித்து வந்ததாகவும், பின்னர் இரு குடும்பத்தினரும் தங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகே திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டுள்ள இணை இயக்குனர், மூடர் கூடம்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்திற்கு நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்றும், திருமணம் செய்துகொண்டாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி, நடிகை சமந்தாவின் ரூட்டை பிடித்துள்ளார் கயல் ஆனந்தி.
தற்போது நான்கு படங்கள் இவரது கைவசம் உள்ள நிலையில், கணவரின் அனுமதியோடு தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ள ஆனந்திக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.