என்ன ஒரு தாராள மனசு; பிரபல இயக்குனர் மகளின் திருமணத்துக்கு உதவிய விஜய் சேதுபதி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரது மகளின் திருமணத்துக்கு உதவி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi Help to Anurag Kashyap
சர்ச்சைகளுக்குப் பெயர்போன இயக்குநர் அனுராக் கஷ்யப், தற்போது தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். 2018-ல் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த அனுராக், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் 'மகாராஜா' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருந்தது.
விஜய் சேதுபதியால் கிடைத்த மகாராஜா பட வாய்ப்பு!
தென்னிந்தியப் படங்களில் நடிப்பது தனது முதல் நோக்கமாக இல்லை என்று அனுராக் தெரிவித்துள்ளார். "'இமைக்கா நொடிகள்' படத்திற்குப் பிறகு பல தென்னிந்தியப் பட வாய்ப்புகள் வந்தன, ஆனால் நான் மறுத்துவிட்டேன். 'கென்னடி' படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன்" என்று கூறினார்.
விஜய் சேதுபதி தன்னிடம் இருந்த கதையை அனுராக்குடன் பகிர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் அனுராக் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், விஜய் சேதுபதியின் ஊக்கத்தால் நடிக்க ஒப்புக்கொண்டார். "அந்தப் படத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
அனுராக் கஷ்யப் மகளின் திருமணத்திற்கு உதவி!
மகாராஜா படப்பிடிப்பின் போது "அடுத்த வருடம் என் மகளின் திருமணம். செலவுகளைச் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை" என்று விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், அதற்கு விஜய் சேதுபதி, "நாங்கள் உதவி செய்கிறோம்" என்று கூறியதாகவும், அதன் பிறகே 'மகாராஜா' படம் உருவானதாகவும் அனுராக் தெரிவித்தார். தற்போது அனுராக் கஷ்யப் பல தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். அடிவி சேஷுடன் இணைந்து 'டகாயத்' என்ற இருமொழிப் படத்திலும் நடிக்கிறார்.
பான்-இந்தியா சினிமா மீது அனுராக் அதிருப்தி
பான்-இந்தியா படங்கள் ஒரு மோசடி என்று அனுராக் கஷ்யப் விமர்சித்துள்ளார். "'பாகுபலி', 'கே.ஜி.எஃப்', 'புஷ்பா' போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அந்த பாணியைப் பின்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது" என்றும், படத்திற்கான முதலீடு முழுவதும் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். அண்மையில் பாலிவுட் திரையுலகின் மீதான அதிருப்தியால் தான் மும்பையை விட்டே வெளியேறிவிட்டதாக அறிவித்திருந்தார் அனுராக் கஷ்யப்.