காதலர்களின் தேசிய கீதம்.. 'வசீகரா..' பாடலை பாடத் தயங்கிய பாடகி.. அட! இப்படி ஒரு காரணமா?
பாம்பே ஜெயஸ்ரீயின் தேன் வடியும் குரல், ஹாரிஸ் ஜெயராஜின் மனதை மயக்கும் இசை, தாமரையின் அழகான தமிழ் வரிகள், நேர்த்தியான காட்சி அமைப்பு, மாதவன் ரீமா சென்னின் ரொமான்ஸ் என இந்த பாடலில் அனைத்து அம்சங்களும் அழகாக பொருந்தி நம்மை மெய்மறக்கச் செய்யும்.

காதலர்களின் தேசிய கீதம்
இந்த வாரம் காதலர்களை கையில் பிடிக்க முடியாது. நாளை மறுநாள் (பிப்ரவரி 14) காதலர் தினத்தில் நமது அன்புக்குரியவர்களை எப்படி இம்ப்ரெஸ் செய்யலாம். அவர்களுக்கு என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என காதலர்கள் கனவுலகில் மிதந்து வருகின்றனர்.
காதலர் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் காதலர்களுக்கு பிடித்தமான ஒரு பாடல், ஏன் காதலர்களின் தேசிய கீதம் என சொல்லப்படும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடலின் சுவாரஸ்யமான கதையை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.
காதல் காவியம் மின்னலே
2001ம் ஆண்டு வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் முதல் படமான 'மின்னலே' திரைப்படத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 80 கிட்ஸ் மற்றும் 90 கிட்ஸ்கள் மட்டுமின்றி இப்போதைய 2கே கிட்ஸ்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு காதல் காவியம் அது.
அதுவும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்று வரையிலும் 'ப்ளே லிஸ்ட்டில்' டாப்பில் இருப்பவை. இந்த படத்தின் மூலம் இசையுலகில் காலடி எடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் காதலர்களின் ஆதர்ச நாயகனாக இருந்து வருகிறார்.
'வசீகரா' பாடல் என்றென்றும் வசீகரிக்கும்
சரி விஷயத்துக்கு வருகிறேன்... 'மின்னலே' படத்தில் இடம்பெற்ற ''வசீகரா... என் நெஞ்சினிக்க... உன் பொன் மடியில் தூங்கினால் போதும்..' என்ற பாடல் நான் முதலிலேயே குறிப்பிட்டபடி காதலர்களின் தேசிய கீதம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பாம்பே ஜெயஸ்ரீயின் தேன் வடியும் குரல், ஹாரிஸ் ஜெயராஜின் மனதை மயக்கும் இசை, தாமரையின் அழகான தமிழ் வரிகள், நேர்த்தியான காட்சி அமைப்பு, மாதவன் ரீமா சென்னின் ரொமான்ஸ் என இந்த பாடலில் அனைத்து அம்சங்களும் அழகாக பொருந்தி நம்மை மெய்மறக்கச் செய்யும்.
முதலில் பாட தயக்கம் காட்டிய பாம்பே ஜெயஸ்ரீ
வசீகராவில் ஹாரிஸின் இசை நம்மை அந்தரத்தில் பறக்கச் செய்தால், பாம்பே ஜெயஸ்ரீயின் வசீகர குரல் நம்மை விண்ணுலகில் மிதக்கச் செய்யும். இந்த பாடலின் வெற்றிக்கு பாம்பே ஜெயஸ்ரீயும் முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அவர் இந்த பாடலை முதலில் பாடத் தயக்கம் காட்டிய சுவாரஸ்ய தகவல் உங்களுக்கு தெரியுமா?
இதுதான் காரணம்
அதாவது வசீகரா பாடலை பாட பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயை ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நேரத்தில் பாம்பே ஜெயஸ்ரீ கோவையில் இருந்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு அதுதான் முதல் படம். இதை யோசித்த பாம்பே ஜெயஸ்ரீ, ஒரு அறிமுக இசையமைப்பாளருக்காக இவ்வளவு தூரம் (கோவையில் இருந்து சென்னைக்கு) செல்ல வேண்டுமா? என யோசித்தாராம். வசீகரா பாடலை பாட தயக்கம் காட்டினாராம்.
மனதை மாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்
ஆனாலும் பாம்பே ஜெயஸ்ரீயை விடாத ஹாரிஸ் ஜெயராஜ் பாடலின் மெட்டை பாடிக் காட்டியுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ அடிப்படையில் ஒரு கர்நாடக இசைப்பாடகி அவருக்கும் வசீகரா பாடலின் மெட்டு மற்றும் ராகம் பிடித்துப்போனது. இதனால் தனது தயக்கத்தை உடைத்து உடனே கோவையில் இருந்து சென்னை வந்து வசீகரா பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.
இந்த தகவலை பாம்பே ஜெயஸ்ரீயே நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ஒருவேளை பாம்பே ஜெயஸ்ரீ மட்டும் வசீகராவை பாடாமல் இருந்து இருந்தால் இப்படி ஒரு எவர்கிரீன் காதல் பாடல் நமக்கு கிடைத்திருக்குமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

