முன்னாள் முதல்வர்கள் நினைவிடத்தில் மனுவை வைத்து அஞ்சலி... தமிழக அரசுக்கு டி.ஆர். வைத்த அதிரடி கோரிக்கைகள்...!
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்தில் கோரிக்கை மனுவை வைத்து அஞ்சலி டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் டி.ராஜேந்தர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் இந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டிய டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
அதன் தலைவராக டி.ராஜேந்தர் தேர்வு செய்யப்பட்ட சில நாட்களிலேயே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருப்பதால் புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று காலை மனைவி உஷா மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரது சமாதியில் கோரிக்கை மனு ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், கொரோனா காலத்தில் சினிமா மிகவும் கஷ்டத்தில் உள்ளது. எனவே 8 சதவீத உள்ளாட்சித்துறை வரியை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் அண்டை மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா, கேரளாவில் அந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே 10 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள படங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி.வரியை நீக்கிவிட்டனர். அதை தமிழக அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதேபோல் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான க்யூப் மற்றும் யூஎஃப்ஓ நிறுவனங்களுக்கான விபிஎஃப் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அதற்காக தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.