இதுவே முதல் முறை... சூர்யாவின் “சூரரைப்போற்று” படைத்த அடுத்த சாதனை... அசரவைத்த ‘அசுரன்’...!
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து படைக்கும் சாதனைகளால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக உள்ளனர்.
சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கொண்டாடி தீர்த்திருக்கலாம் என்ற குறையை தவிர, படத்தின் விமர்சனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏர்டெக்கான் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி தெலுங்கு நடிகர் மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சூர்யாவின் மிரட்டல் நடிப்பு கண்கலங்க வைத்துவிட்டதாக திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டினர். என்ன நடிப்பு? என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல ஹீரோக்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.
அதுமட்டுமின்றி ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் பார்த்த திரைப்படத்தில் இரண்டாவது இடம், ட்விட்டரில் அதிகம் பேர் ட்வீட் செய்த படம் என்ற பெருமையையும், கூகுளில் அதிகம் பேர் தேடிய படம் என்ற பெருமையையும் செய்தது.
தற்போது 78-வது கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. இந்த விருது விழாவில் போட்டியிட முதன் முறையாக அனுமதி பெற்ற நேரடி ஓடிடி ரிலீஸ் திரைப்படம் சூரரைப்போற்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.
அதேபோல் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியாகி தாறுமாறு ஹிட்டான அசுரன் திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் திரையிடப்பட உள்ளது.
வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு பஞ்சமி நில பிரச்சனை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதில் வயதான தோற்றத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்த தனுஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.