- Home
- Cinema
- Rajini : யாருமே கண்டுக்கல... என் ஈகோ சுக்குறூறாய் உடைந்த தருணம் அது - முதன்முறையாக பகிர்ந்த ரஜினிகாந்த்
Rajini : யாருமே கண்டுக்கல... என் ஈகோ சுக்குறூறாய் உடைந்த தருணம் அது - முதன்முறையாக பகிர்ந்த ரஜினிகாந்த்
Superstar Rajinikanth : பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

Rajinikanth Ego-Shattering Experience
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த், சென்ற இடமெல்லாம் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மூழ்குவது வழக்கமான ஒன்று. அவரை நேரில் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவம் தனது புகழ் மற்றும் ஈகோ பற்றிய பார்வையை முழுமையாக மாற்றியதாக ரஜினிகாந்த் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழாவிலும், குருஜியின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினிகாந்த், ஆன்மீக அனுபவம் தொடர்பான நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டார்.

அனுபவத்தை பகிர்ந்த ரஜினி
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச ஆசிரமத்துக்கு சென்றிருந்த அனுபவத்தை கூறிய அவர், “ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த அமைதியான சூழல் என்னை ஆழமாக கவர்ந்தது. பசுமையான இயற்கை, ஏரிகள், விலங்குகள், மக்களின் அமைதியான முகபாவனை எல்லாமே மனதிற்கு வேறொரு உணர்வை கொடுத்தது. இரண்டு நாட்களுக்கு மட்டுமே தங்க நினைத்த நான், அங்கிருந்த ஆன்மீக சூழ்நிலையால் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன்,” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், குருஜியுடன் நடந்த ஒரு சம்பவம் தனது மனநிலையை மாற்றியதாகவும் அவர் கூறினார். “ஒருநாள் ஆசிரமத்தை சுற்றி பார்க்க வருமாறு குருஜி அழைத்தார். ஆனால் நான் வெளியே சென்றால் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம், ஆட்டோகிராப் கேட்பார்கள்; அது அவருக்கு சிரமமாகிவிடுமோ என்று தயங்கினேன்,” என ரஜினிகாந்த் நினைவுகூர்ந்தார்.
ரஜினியின் ஈகோ உடைந்த கதை
இதற்கு குருஜி எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்பிக்கை அளித்ததாகவும், பின்னர் இருவரும் வெளியே சென்றதாகவும் கூறினார். “அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். என்னை பார்த்ததும் எல்லோரும் வந்து பேசுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு நபர் கூட என்னை திரும்பிப் பார்க்கவில்லை,” என்று ரஜினி கூறியதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
“யாரும் புகைப்படம் கேட்கவில்லை, ஆட்டோகிராப் கேட்கவில்லை. நான் கை அசைத்தும் கூட யாரும் கவனிக்கவில்லை. அது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. அந்த தருணமே என் ஈகோவை முற்றிலும் உடைத்தது,” என்று அவர் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.
ஆன்மீகத்துக்கு இணை வேறெதுவுமில்லை
அப்போது மேடையில் இருந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது என்று நான் முன்பே சொன்னேனே,” என்று நகைச்சுவையாக கூறினார். அதற்கு ரஜினிகாந்த் தனது தலையை சுட்டிக்காட்டி, “இங்கே தான் பெரிய தாக்கம் ஏற்பட்டது,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
புகழும் நட்சத்திர அந்தஸ்தும் ஆன்மீகத்தின் முன் மிகச் சிறியது என்பதை அந்த அனுபவம் உணர்த்தியதாக கூறிய ரஜினிகாந்த், “ஆன்மீகத்தின் சக்திக்கு இணையானது வேறொன்றுமில்லை,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

