வெட்டுனா மட்டும் போதாது..வேரையே அறுக்கணும்.. அரசியலை சீண்டும் சிபியின் மாயோன்!
சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் புரொமோஷன் டைலாக் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
maayon
அதிமுக பொதுக்குழு கூட இருக்கும் அதே நாள்தான் மாயோன் என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. அந்தப்படத்தின் ட்ரெய்லரில் வெளியானதுதான் ’கிளைகளை வெட்டுனா மட்டும் போதாது. வேரையே அறுக்கணும்’ என்கிற வசனம். சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக ரதம் ஒன்று தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. மாயோன் திரைப்படம் இம்மாதம் 24ம்தேதி திரைக்கு வருகிறது.
maayon
சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மாயோன். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதையும் அவரே எழுதியுள்ளார். கிஷோர் இயக்கியுள்ளார்.
புதையல் வேட்டை, சிலை கடத்தல் என சுவாரசியமும், பரபரப்பும் நிறைந்த த்ரில்லர் படமாக மாயோன் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்காக புதுவித புரொமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரதம் ஒன்று படத்தில் வருவது போன்று அமைக்கப்பட்டு அதில் விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த ரதம் தொடர்ந்து 26 நாட்கள் எனத் திட்டமிட்டு தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
maayon
இந்தப் படம் குறித்து நடிகரும், மூத்த இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘இந்த படத்தில் பல ஆச்சரியங்கள் உள்ளன. ஷூட்டிங்கின்போது குகைபோன்ற இடத்திற்கு சென்றோம். உள்ளே ஒரு கோயிலை அமைத்துள்ளார்கள். இந்த படத்தின் கலை இயக்கம் பிரம்மிக்கும் வகையில் உள்ளது’ என்கிறார்.
maayon
இதுகுறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், ‘டாவின்சி கோட், இன்டியானா ஜோன்ஸ் போன்று படம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதுவும், இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்தப் படம் அமையும்.’ என்கிறார்.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் கிஷோர் கூறுகையில், ‘மாயோன் ஃப்ரெஷ்ஷான திரைக்கதை. நிறைய பொருட் செலவில் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க எளிதாக புரிந்து, உணரக்கூடிய படமாக இருக்கும் என்கிறார்.