தென்னிந்தியாவில் முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளியது ‘இந்த’ தமிழ் நடிகரின் படம் தானா?
தென்னிந்தியாவில் முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளியது ஒரு தமிழ் படம் தான். அது என்ன படம்? யார் நடித்த படம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

First 100 Crore Collected Movies in South India
100 கோடி வசூல் என்பது இன்றளவும் பல நடிகர்களின் கனவாக உள்ளது. அந்த 100 கோடி வசூல் சாதனையை பாலிவுட் படங்கள் 1982-ம் ஆண்டே வசூலித்துவிட்டன. மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் திரைப்படம் தான் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த இந்திய படமாகும். இதன்பின்னர் சல்மான் கானின் ‘ஹம் ஆப்கே ஹெயின் கவுன்’, ஷாருக்கானின் ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ ஆகிய படங்கள் அந்த வசூல் சாதனையை படைத்தன.
டிரெண்ட் செட்டராக மாறிய ரஜினி
ஆனால் தென்னிந்திய சினிமாவுக்கு 2007-ம் ஆண்டு வரை 100 கோடி வசூல் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதனை முதன்முதலில் எட்டிப்பிடித்தது ஒரு தமிழ் படம் தான். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சிவாஜி தி பாஸ் திரைப்படம் தான் முதன்முதலில் 100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படமாகும். இதன்பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் 2010-ல் வெளியான எந்திரன் திரைப்படமும் 100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி அசத்தியது.
வரலாறு படைத்த பாகுபலி
தமிழ்நாட்டைத் தொடர்ந்து இந்த சாதனையைப் படைத்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம். தெலுங்கு சினிமாவின் முகத்தையே மாற்றிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' திரைப்படம் தான் தெலுங்கில் முதன்முதலில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாகும். இப்படம் 2015-ல் வெளியானது. முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் 2017-ல் வெளியான 'பாகுபலி 2' தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முதன்முதலில் 100 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையைப் படைத்தது.
கன்னடத்தில் முதல் 100 கோடி வசூல் படம் கேஜிஎஃப்
அதேபோல் கேரளாவில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன புலிமுருகன் திரைப்படம் முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை படைத்தது. கர்நாடகாவில் பாகுபலி 2 முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளி இருந்தாலும் அது நேரடி கன்னடப் படம் இல்லை. ஒரு நேரடி கன்னடப் படமாக 100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த இப்படம் 2018-ம் ஆண்டு இந்த சாதனையை படைத்தது.