- Home
- Cinema
- இனி சோசியல் மீடியா பக்கம் தலைகாட்டவே மாட்டேன்... தடாலடியாக அறிவித்த ஐஸ்வர்யா லெட்சுமி - காரணம் என்ன?
இனி சோசியல் மீடியா பக்கம் தலைகாட்டவே மாட்டேன்... தடாலடியாக அறிவித்த ஐஸ்வர்யா லெட்சுமி - காரணம் என்ன?
Aishwarya Lekshmi : நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி தான் சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறி உள்ளார்.

Aishwarya Lekshmi Quits Instagram
நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி சமூக வலைதளங்களை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வேலைக்காக பயன்படுத்தத் தொடங்கிய சமூக வலைதள தன்னை கட்டுப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டதாகவும், அது தனது சிந்தனை, மொழி, மகிழ்ச்சி போன்றவற்றை பாதித்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தை விட்டு விலகும் முடிவை நீண்ட நாட்களாக யோசித்து வந்ததாகவும், இன்ஸ்டாகிராமில் இல்லாதவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதை அறிந்திருந்தும் அந்த ஆபத்தை ஏற்க உள்ளதாகவும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களுக்கு கல்தா
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : "சமூக வலைதளம் என்னுடைய வேலைக்கும் ஆராய்ச்சிக்குமான வழியைத் தவறிவிட்டது. என்னுடைய சிந்தனைகளையும் மொழியையும் அது தீய வகையில் பாதித்துள்ளது. என் மகிழ்ச்சிகளையும் அது அழித்துவிட்டது. சமூக ஊடகத்தின் தீமைகளைப் புரிந்துகொள்ளப் பெரும் முயற்சி மேற்கொண்டேன். சமூக வலைதளத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் பல நாள்களாக இருந்ததாகவும், இன்ஸ்டாகிராமில் இல்லாதவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அன்பை வழங்க மறந்து விடாதீர்கள்
"எனக்குள் இருக்கும் கலைஞனையும், சிறுமியையும் காப்பாற்றுவதற்காக இணையத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். இதன்மூலம் அர்த்தமுள்ள உறவுகளையும் சினிமாவையும் வாழ்க்கையில் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நல்ல திரைப்படங்கள் செய்தால் அன்பை வழங்க மறந்து விடாதீர்கள்," என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்திருந்த நிலையில், இன்று நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் அதே முடிவை எடுத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா லெட்சுமி திரைப்பயணம்
நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி தமிழில் சுந்தர் சி இயக்கிய ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக தனுஷுடன் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், இதையடுத்து அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ஐஸ்வர்யா லெட்சுமியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா, தற்போது அவர் நடிப்பில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.