சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா... தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா ‘மூக்குத்தி அம்மன்’?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தால் புது சிக்கல் வெடித்துள்ளது.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதில் முதன் முறையாக அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா பிரச்சனைக்கு முன்னதாகவே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையிலும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது. நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன், புனித அப்பத்தை புசிப்பேன் ஆனால் ஒரு போதும் ஆடி மாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன் என்ற வசனத்துடன் தொடங்கும் போதே டிரெய்லர் சூடு பறக்க ஆரம்பித்தது.
“தமிழ்நாட்டில் மட்டும் தான் மதத்தை வச்சி ஓட்டு வாங்க முடியல?... அதை இன்னும் 5 வருஷத்தில் நான் நடத்திக் காட்டுவேன்” என்பதில் தொடங்கி, மனோ பாலா செய்யும் பவர் காமெடி காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது மத அரசியலை படம் பேசியிருப்பது தெரியவந்தது.
தற்போது 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு தடைகோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் அளித்துள்ள புகாரில், சிறுபான்மை மக்களை கொச்சை படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதால், படத்தை தடை செய்யவேண்டும் என கோரியுள்ளனர். இதனால் 'மூக்குத்தி அம்மன்' படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.