“சார்பட்டா பரம்பரை” படத்தில் திமுகவை பற்றி 3 முக்கிய விஷயங்கள்... பா.ரஞ்சித் அரசியல் டச்சை கவனிச்சீங்களா?
சார்பட்டா பரம்பரை படத்தில் பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசுகிறார். குறிப்பாக திமுக - அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல்வேறு வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
1970ல் சென்னையில் நடந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் கொண்டு வந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டருக்கு பதிலாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வடசென்னையின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்துள்ளதாக படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகிறது.
இந்த படத்தில் பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசுகிறார். குறிப்பாக திமுக - அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல்வேறு வசனங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பா.ரஞ்சித் திமுக குறித்து 3 விஷயங்களை பதிவு செய்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் வடசென்னையில் பாக்ஸர்களை யானை மேல் வைத்து ஊர்வலம் நடத்தும் அளவிற்கு பாக்ஸிங் கலாச்சாரத்தை ஆதரித்ததை பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்போது பாக்ஸர் திமுகவோட நெருக்கமாக இருந்தது, திமுக கட்சி பெயர் மற்றும் கொடியை எல்லாம் படத்தில் காட்டியுள்ளார்.
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் திமுக என்ன மாதிரியான நெருக்கடிகளைச் சந்திச்சாங்க. எப்படியெல்லாம் கைது செய்யப்பட்டாங்கன்னு காட்டியிருக்கிறார். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே உருவான பிரச்சனை சுட்டிக்காட்டியுள்ள ரஞ்சித், முதல் சீனிலேயே சார்பட்டா பரம்பரைக்கார வீரரை கருப்பு சிவப்பு நிற உடையிலும், இடியப்பன் பரம்பரைக்கார வீரரை காங்கிரஸ் கொடி கலர் உடையிலும் காட்டியிருப்பார். நெருக்கடி காலத்தில் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதால பாக்ஸிங் எப்படி பாதிக்கப்பட்டது. அதற்குள் ரவுடியிசம், கள்ளச்சாராயம் எப்படி புகுந்தது என்பது குறித்து விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அதிலும் ஒரு காட்சியில் பாவம்... கலைஞர் மகனையே கைது பண்ணிட்டாங்களாம்... பாக்ஸிங்கை நிறுத்துங்க என தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலின் நெருக்கடி காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டதையும், அதிமுக பக்கம் சேரும் ஹீரோ பாக்ஸிங்கில் கவனம் செலுத்தாமல் திசை திரும்புவது போலவும் தைரியமாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.