திரைப்படம் ஆகிறது ஆபரேஷன் சிந்தூர்; டைட்டிலை கைப்பற்ற தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி!
ஆபரேஷன் சிந்தூரை மையமாக வைத்து படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த டைட்டிலை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறதாம்.

Demand For Operation Sindoor Film Title
இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் படம் எடுக்க 15க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் அசோசியேஷனில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசோக் பண்டிட், மதுர் பண்டார்கர் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களும், டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்களும் இந்தப் பெயருக்காக போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்ததா ஜியோ?
ஜியோ ஸ்டுடியோஸ் இந்தப் பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்ய விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் பின்னர் அறிக்கை வெளியிட்டது. நிறுவனத்தின் இளநிலை ஊழியர் ஒருவர் முன் அனுமதி பெறாமல் விண்ணப்பித்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிறுவனம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து விண்ணப்பத்தை திரும்பப் பெற முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முத்திரை பெறுபவர்கள் அந்தப் பெயரில் திரைப்படம், தொடர் போன்றவற்றை தயாரிக்க முடியும். இந்தியாவில் அதற்கு சட்டத் தடை எதுவும் இல்லை.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படம்
இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் முன்னரும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையமாகக் கொண்ட உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது. விக்கி கௌஷல் நாயகனாக நடித்த இந்தப் படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். யாமி கௌதம் நாயகியாக நடித்திருந்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர்
இதற்கிடையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூருடன் முடிவடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். அனைத்திற்கும் தயாராக இருக்குமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். ராணுவ மையங்களைத் தாக்கவும் இந்தியா தயங்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மேலும் பல தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு இரண்டாம் கட்டம் இருப்பதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் பட்டியலில் உள்ள 21 தீவிரவாத மையங்களில் 9 மையங்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன.