“நாளை தியேட்டர்களை திறப்போம்... ஆனால்”... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்...!
இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் வி.பி.எஃப் கட்டணம் குறித்து எவ்வித சுமூக முடிவு எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளோடு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்பதால் கிருமி நாசினி தெளிப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கான முன்னேற்பாடு போன்ற பணிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் வி.பி.எஃப் கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதனால் மீண்டும் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.
இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் வி.பி.எஃப் கட்டணம் குறித்து எவ்வித சுமூக முடிவு எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பழைய படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர்களுடன் சுமூக முடிவு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட வாய்ப்பில்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நாளை தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.