“நாட்டிய தாரகை ஜொலிப்பதை கண்டேன்”... அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் நாட்டியத்தில் மெய் சிலிர்த்துப் போன இளையராஜா!
அரங்கேற்ற நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், கோபிகா கீதம், பாரதியார் பாடல், தில்லானா ஆகிய வடிவங்களில் ரிதன்யா பிரியதர்ஷினி தொடர்ந்து 2.30 மணி நேரம் பரதம் ஆடி அசத்தினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் கலையரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் விவேக், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மற்றும் பாரத நாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரங்கேற்ற நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், கோபிகா கீதம், பாரதியார் பாடல், தில்லானா ஆகிய வடிவங்களில் ரிதன்யா பிரியதர்ஷினி தொடர்ந்து 2.30 மணி நேரம் பரதம் ஆடி அசத்தினார்.
நவரசங்களையும் முகத்தில் காட்டி, முதன் முறையாக பரதம் ஆடும் எவ்வித அச்சமும் இன்றி ரிதன்யாவின் நடனம் இருந்ததாகவும், பரதத்தின் போது கண்கள் கூட பேசுவதை கண்டதாகவும் பரத நாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் பாராட்டினார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் “நான் இங்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரியாகவும், பிரியதர்ஷினியின் அத்தை என்ற முறையிலுமே வந்திருக்கிறேன். பிரியதர்ஷினி நடனத்தில் முகபாவங்கள் அவ்வளவு அழகாக இருந்தது. முதல் பாடலே “வெள்ளை தாமரை பூவில் இருப்பாள்” என்பது அதனால் எனக்கு இந்த மேடை மிகவும் பிடித்தது என நகைச்சுவையுடன் கூறினார்.
இசைஞானி இளையராஜா பேசும் போது “பிரியதர்ஷினி எனக்கு இது உன்னுடைய அரங்கேற்றமாக தெரியவில்லை. ஒவ்வொரு கை தட்டல் வரும் போதும் உன் கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன். உன்னுடைய உணர்வு உண்மையானது. இது முதல் நடனம் என்பது போல் எனக்கு தெரியவில்லை, பண்பட்ட நாட்டிய தாரகையே வந்து மேடையில் ஜொலிப்பது போல் இருந்தது” என பாராட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது “பரத நாட்டியம் பற்றி எனக்கு முழு அனுபவம் கிடையாது. ரசிக்கத்தான் முடியும். பரதநாட்டியத்தை கற்றுக்கொள்வது என்பது அரிது, அதை திறம்பட கற்றுக்கொள்வது என்பது மிக மிக அரிது. சிறு வயதிலேயே முகபாவத்துடன் ஆடியது வியக்க வைத்தது. ரிதன்யா மேன்மேலும் பரத கலையில் உயர்ந்து விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.
5 வயது முதலே பரத கலையை கற்க தொடங்கி கடந்த 9 ஆண்டுகளாக ரிதன்யா பிரியதர்ஷினி நான் பார்த்து வருகிறேன். ரிதன்யா கால் பாதிக்கும் அனைத்து துறைகளிலும் முதன்மையாக வரவேண்டும் என வாழ்த்துவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்தினார்.